முதல் அடி எடுத்து வைப்பதுதான் மிகக் கடினமானது. முதல் சொற்கள் ஒரு வெளியை திறக்கின்றன. என்னை காதலில் விழச் செய்யப் போகிற பெண்ணின் முதல் பார்வைப் போல – ஒரு புன்னகையின் குறிப்பில் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. இதை எழுதும் முன்பு நீண்ட காலம் தயக்கத்தில் இருந்தேன். இங்கு கனடாவில் எனது வீட்டிற்கு பின்புறம் உள்ள குறுங்காட்டில் நீண்ட நடைகள் சென்றேன். இன்னமும் எங்கு செல்கிறேன் என்று உறுதியாகத் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய ஆய்வு வெண்துளைகளை மையப்படுத்தியுள்ளது. அவை கருந்துளைகளின் (black hole) , நழுவி ஓடும், இளையச் சகோதரர்கள். இது வெண்துளைகள் பற்றிய எனது நூல். இப்போது விண்ணில் நூற்றுக்கணக்கில் நாம் காண்கிற கருந்துளைகளை என்னால் இயன்றளவு விவரிக்க முயற்சிக்கிறேன். காலம் மெதுவாகி கடைசியில் நின்றேப் போய் வெளி முடிவடைவதாக தோன்றுகிற, இந்த விசித்திர விண்மீன்களின் விளிம்புகளில், அவற்றின் அடிவானத்தில் என்ன நடக்கிறது? பிறகு உட்புறம், கீழே, வெகுக் கீழே, காலமும் வெளியும் உருகும் ஆழத்து உட்பகுதிகளில் என்ன நடக்கிறது? காலம் பின்னோக்கித் திரும்பும் அந்த இடம். வெண்துளைகள் பிறக்கும் அந்த இடம். இவற்றையெல்லாம் இயன்ற அளவு விவரிக்க முயற்சிக்கிறேன்.
இது ஒரு பயணக்கதை. இன்னமும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு சாகசத்தின் கதையும் கூட. எந்தவொரு பயணத்தின் தொடக்கத்தையும் போல, இதுவும் என்னை எங்கே அழைத்துச் செல்லும் என்று உறுதியாக தெரியவில்லை. முதல் புன்னகையை கண்டதுமே, நாம் எங்கு சேர்ந்து வாழப் போகிறோம் என கேட்க முடியாதே. ஆனாலும் ஒரு பயணத்திட்டம் மனதில் உள்ளது. அடிவானின் முனையை அடைந்து உள்நுழைய வேண்டும். அதன் ஆழம் வரை செல்ல வேண்டும். அதையும் கடந்து வெளியேற வேண்டும். ஆலீஸ் கண்ணாடியில் சென்றதைப் போல, உட்புகுந்து மறுபுறம் -வெண்துளையில்- வெளிவர வேண்டும். காலம் பின்னோக்கி செல்வதன் பொருள் என்ன என்று அங்கே கேட்க வேண்டும்… நம்முடைய விண்மீன்களை, பழகிய விண்மீன்களை காண திரும்பி வரும் முன்பு, அதை கேட்க வேண்டும். சில நொடிகள் மட்டுமே நீண்ட -ஆனால் அதுவே கோடிக்கணக்கான ஆண்டுகளாகவும் இருக்கும் ஒரு காலத்துக்கு, அல்லது இந்த சிறிய நூலை மட்டும் படிக்க தேவைப்படுகிற காலத்துக்கு பின்னர், அதை கேட்க வேண்டும்.
இப்பயணத்தில் என்னுடன் நீங்களும் வருகிறீர்களா?
OOO

மார்சே (Marseille).
ஹால் எனது படிப்பறையின் கரும்பலகை முன்பு நின்று கொண்டிருக்கிறார். நான், முழங்கையை மேஜையில் வைத்து, அவர்மீது கண்களை நிலைகுத்தியவாறு, என் பெரிய சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். மத்திய தரைக்கடல் பகுதியின் தூய மின்னும் ஒளி, சாளரம் வழியே அறைக்குள் விழுந்து கொண்டிருக்கிறது. வெண்துளைகளுடனான எனது சாகசம் இவ்வாறுதான் துவங்கியது.
ஹால் ஒரு அமெரிக்கர். அவர் கருத்துக்களில் உள்ள புத்திசாலித்தனத்தைக்கூட எளிமையாக காட்டும்படி அவரிடம் ஒரு இயல்பான விநயம் இருந்தது. இன்று அவர் ஒரு கல்லூரி விரிவுரையாளர். அன்று அவர் மாணவராக இருந்தார். கனிவும், துல்லியமும், தனது வயதுக்கு மீறிய சமநிலையும் அமைதியும் உடையவர். என்னால் புரிந்து கொள்ள முடியாத ஏதோவொரு விஷயம் பற்றி சொல்ல முயன்று கொண்டிருந்தார். கருந்துளையின் மிக நீண்ட ஆயுள் முடிவடைகிற அந்த குறிப்பிட்டக் கணத்தில், அதற்கு என்ன நிகழக்கூடும் என்பது பற்றிய கருத்து அது.
அவரது சொற்களை நினைவு கூறுகிறேன்: காலத்தை பின்னோக்கி திருப்புவதால் ஐன்ஸ்டைனின் சமன்பாடுகள் மாறுவதில்லை. மீண்டு வர, காலத்தை பின்னோக்கி திருப்பிவிட்டு முடிவுகளை ஒன்றாக இணைத்தால் போதும்.
எனக்கு குழப்பமாக இருந்தது.
சடாரென்று அவர் சொல்ல வந்ததைக் கண்டுகொண்டேன். ஆஹா! (நான் இத்தாலியன் – அமைதி என்பதே என்னிடத்தில் இல்லை). கரும்பலகைக்குச் சென்று வரைந்து பார்த்தேன். இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.
ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னார்: “ஆம், சற்றேறக்குறைய இதுதான்”. நான், “…துளிம ஊடுருவல்கள் (Quantum tunnels) வழியே, கருந்துளை உள்ளே வெண்துளையாக இருக்கிறது. வெளியே அப்படியே நீடிக்கிறது” என்றேன். அவர் மேலும் சிறிது சிந்தித்து விட்டு ”ஆம்… எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இது சரியாக வருமா?” என்றார்.
சரியாகவே வந்தது. குறைந்த பட்சம் கோட்பாட்டளவில். மார்சேயின் பிரகாசமான வெளிச்சத்தில் இந்த சம்பாஷனை நடந்து ஒன்பது வருடங்களாகிவிட்டது. கருந்துளை வெண்மையாக உருமாறும் என்னும் கருதுகோளை முன்வைத்து மாணவர்களுடனும் சகாக்களுடனும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். என்வரையில் ரொம்பவும் அழகாக தோன்றும் கருத்து இது. இதைப் பற்றியே இங்கு கூற விரும்புகிறேன்.
இது சரியானதா என்று தெரியவில்லை. வெண்துளைகள் உண்மையில் உள்ளனவா என்றே எனக்குத் தெரியவில்லை. கருந்துளைகளைப் பற்றி நமக்கு இப்போது பல விஷயங்கள் தெரியும் – அவறைக் காணவும் செய்கிறோம். வெண்துளையை யாருமே பார்த்ததில்லை – இதுவரையில்.
பாஜுவாவில் (Padua) ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருக்கையில், மரியோ தோன்றின் (Mario Tonin), கோட்பாட்டு இயற்பியலை கற்பித்தார். அவர் சொன்னார் – பிதாவானவர், ஒவ்வொரு வாரமும் புகழ்பெற்ற Physical Review D சஞ்சிகையை வாசிப்பதாக நான் கருதுகிறேன். அதிலுள்ள ஏதேனும் ஒரு கருத்து அவரை கவர்ந்தால், Shazam! என அதை நடைமுறைப்படுத்தி, பிரபஞ்ச விதிகளை அதற்கேற்ப மாற்றி விடுகிறார்.
இது உண்மையென்றால், பிதாவானவரே, கருந்துளை இறுதியில் வெண்துளையாக மாற நீங்கள் ஏற்பாடு செய்தால் நான் நன்றியுடன் இருப்பேன்….
மேற்சொன்ன வரிகளை படித்து பார்க்கிறேன். வெண்துளைகளுடனான என் முதல் சந்திப்பு. அனைத்தையும் சரியான வரிசையில் கூற விரும்புகிறேன். ஹாலும் நானும் என்ன விதமான பொருட்கள் பற்றி பேசினோம் – அவற்றைப் பற்றி என்ன தெரியும்? என்ன தெரியாது? நாங்கள் தீர்க்க விரும்பிய புதிர் என்ன? ஹாலின் கருத்து உண்மையில் என்னது? அதன் விளைவுகள் என்ன? காலத்தைத் திருப்புவது என்றால் என்ன (அது அவ்வளவு சிக்கலானது அல்ல). காலத்திற்கு திசை இருக்கும் என்றால் அதன் பொருள் என்ன?(ஆச்சரியமாக, இது தான் சிக்கலானது).
என்னைப் பின்தொடர்ந்தால், கருந்துளையின் ‘அடிவான’த்திற்கு அழைத்துச் செல்வேன். அதனுள் நுழைந்து அடியாழம் வரை செல்வோம். அதனையும் கடந்து சென்று, காலம் பின்னோக்கி திரும்பியிருக்கும் வெண்துளையினுள் எழுவோம். அங்கிருந்து மீண்டும் விண்மீன்களைக் காணும் வரை முன் செல்வோம்.

நான் இப்பயணத்தை தொடங்கலாம் : வெண்துளைகளை நோக்கி.
(2)
உண்மையில் நாம் முதலில் கருந்துளை நோக்கியே பயணிக்க வேண்டும். வெண்துளை என்றால் என்ன என்றறிய கருந்துளை பற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அது என்ன?
முதலில் தவறிழைத்தது ஐன்ஸ்டைன். வெறியுடனும் பதைபதைப்புடனும் கூடிய ஒரு தசாப்த உழைப்பிற்குப் பிறகு, 1915ல், தனது முக்கிய தேற்றத்தின் இறுதி சமன்பாடுகளை வெளியிட்டார். இன்று உலகில் உள்ள அனைத்து பல்கலைகளைக்கழகங்களில் அது பயிலப்படுகிறது : பொதுச் சார்புக் கொள்கை.
வெளியீட்டிற்குப் பிறகு சில வாரங்களில், தனது இளம் சகாவான கார்ல் ஷ்வர்ஸ்ஷில்டிடம் (Karl Schwarzschild) இருந்து ஐன்ஸ்டைனுக்கு கடிதம் வந்தது. ஜெர்மன் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த கார்ல் இன்னும் சில மாதங்களில் கிழக்கு முனையின் கடும் சிக்கல்களின் விளைவாக தன் உயிரை இழக்கவிருந்தார்.
இந்த அழகிய வரிகளுடன் கடிதம் நிறைவடைகிறது. “நீங்களே பார்க்கிறீர்கள்! அதீத துப்பாக்கிச் சத்தங்களையும் தாண்டி, அவற்றில் இருந்தெல்லாம் விலகி உங்களது சிந்தனைப் புலத்தில் சிறிது நேரத்திற்கேனும் உலாவ அனுமதிக்கும்படி யுத்தம் என்னை கருணையுடன் நடத்தியுள்ளது”. உங்களது சிந்தனைப் புலத்தில் உலாவ…..
இன்று போலவே அன்றும் தீவிரமாக பரவியிருந்த மானுடத்தின் முட்டாள்த்தனத்தினால் கொல்லப்பட்ட (ஓர் எல்லைக்கோட்டுக்காக சாவதைவிட முட்டாள்த்தனமான செயல் வேறென்ன இருக்க முடியும்?) இளம் ஜெர்மானிய மற்றும் ரஷ்ய வீரர்களது உடல்களுக்கு நடுவே, கிழக்கு முனையில் ஏற்பட்ட குறுகிய போர் நிறுத்த காலத்தில், ஐன்ஸ்டைனின் சிந்தனைப் புலத்தில் உலாவிக் கொண்டிருக்கும் போது, அவரது சமன்பாடுகளுக்கான சரியான தீர்வுகள் ஷ்வார்ஸ்ஷில்டிற்குக் கிடைத்தன.
முன்பே இந்த சமன்பாடுகள் ஐன்ஸ்டைனுக்கு மிகுந்த சிக்கலை அளித்திருந்தன. தொடர்ச்சியாக அவர் கட்டுரைகளில் நிகழ்ந்த மேம்பாட்டை வைத்து இதை அடையாளம் காணலாம். ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும். அனைத்துமே பிழையானவை.
ஆனால் இறுதியாக 1915ல், சமன்பாடுகள் சரியாக அமைந்தன. கடிகாரம் மலையுச்சிகளில் சமதளத்தை விட மெதுவாக நகர்வதையும் பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைவதையும் வெளி அலைகளாக இருப்பதையும் காட்டிய சமன்பாடுகள் அவை. காலம் மற்றும் வெளி குறித்த தங்கள் புரிதல்களை, இயற்பியலாளர்கள் மாற்றிக்கொள்ள வழிவகுத்தவை. அண்டத்தினை கற்றறிய இச்சமன்பாடுகளையே இன்று பயன்படுத்துகிறோம். ஒருவேளை மொத்த இயற்பியலிலேயே, ஆக அழகு பொருந்தியவை இவையாக இருக்கலாம். (எனது இயற்பியலின் ஏழு சுருக்கக் குறிப்புகள் நூலில் காட்டியுள்ள ஒரே சமன்பாடும் அதுவே).
இச்சமன்பாடுகளுடன் நெருக்கமான ஆனால் அசௌகரியமான உறவினை இனி வரும் பக்கங்கள் வழியாகப் பேணப் போகிறோம். காலம், இடம், ஈர்ப்பு விசை குறித்த இதுவரையிலான மிகச்சிறந்த புரிதலைக் கொண்டிருப்பதால், டிவைன் காமெடியில் (Divine comedy) தாந்தேவிற்கு விஜில் போல இவை நமக்கு வழிகாட்டும். நமது அறிதலுக்கான கருவிகள் இவை. கருந்துளையின் விளிம்பிலும் அதற்குள்ளும் எதை எதிர்நோக்கலாம் என அவை உரைக்கின்றன. வெண்துளைகள் என்னவாக இருக்கின்றன என்பதையும் அவையே உரைக்கின்றன. மர்மமான பிரதேசங்களுக்குள் செல்வதற்கான வழிகளை இவை காட்டுகின்றன.

ஆனாலும், நான் சொல்கிற இந்தக் கதையின் முழு குறிக்கோளும், இந்த சமன்பாடுகள் வேலை செய்யாத இடத்தில் என்ன நிகழும் என்பதை சென்று பார்க்க வேண்டும் என்பதே. எங்கு இவற்றைக் கைவிட வேண்டியது அவசியம் என்பதையே. அறிவியல் என்பதே இதுதான்.
தாந்தே தனது பயணத்தின் நடுவில் இன்னமும் வசீகரமான வேறொன்றால் கவரப்பட்டு விஜிலை கைவிட்டுச் சென்றது போல், நமது பயணத்தின் நடுவிலும் இந்த சமன்பாடுகளின் உறுதியான வழிகாட்டுதல்களை விலக்கி விட்டு, இன்னொன்றால் வழிநடத்தப்படக் கூடும்.
ஷ்வார்ஸ்ஷில்டிற்குத் திரும்புவோம். ஐன்ஸ்டைனுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் அறிவித்த தீர்வு இன்று எல்லா பல்கலைக்கழக பாடநூல்களிலும் இருக்கின்றன. பூமி அல்லது சூரியன் போன்ற ஒரு நிறையைச் (mass) சுற்றியுள்ள வெளிக்கும் காலத்திற்கும் என்ன நிகழ்கிறது என்பதை அது விளக்குகிறது. பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசை (gravity) காலத்தையும் வெளியையும் வளைக்கிறது (இதன் அர்த்தம் என்ன என்பதை விரைவில் விளக்குகிறேன்). காலம் மற்றும் வெளியின் இந்த வளைவே பொருட்களை பூமியை நோக்கி விழச் செய்கின்றன. கிரகங்களை சூரியனை சுற்றி வரச் செய்கின்றன. ஈர்ப்பு விசையின் அடிப்படை காரணம் இதுவே.
பூமி, சூரியன் முதலிய கனமான பொருட்களது ஈர்ப்பு விசையின் விளைவாக (பிற) பொருட்கள் எப்படி நகர்கின்றன? இக்கேள்வியை ஷ்வார்ஸ்ஷில்ட் ஆராய்ந்தார். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நியூட்டன் ஆராய்ந்த, நவீன இயற்பியலுக்கு வழிவகுத்த அதே கேள்வி. பெரு நிறைகளைச் சுற்றியுள்ள பொருட்களின் நகர்வு குறித்த நியூட்டனின் கணிப்புகளை ஐன்ஸ்டைனும் ஷ்வார்ஸ்ஷில்டும் திருத்தி மேம்படுத்தினர்.
ஆனால், ஷ்வாரஸ்ஷில்ட் கண்டுபிடித்த தீர்வு, கிரகங்களின் நகர்வுக்கு மட்டுமே ஏதோ சின்ன திருத்தத்தை தரவில்லை. முற்றிலும் புரட்சிகரமான புதியதொரு விஷயத்தை கணித்தது; விசித்திரமானதும் கூட. நிறையானது அதீதமாக அழுத்தம் பெறும்போது, தன்னைச் சுற்றி கோள வடிவிலான, முற்றிலும் நம்ப இயலாத ஒரு கூட்டை உற்பத்தி செய்து கொள்ளும். பொதுவாகவே நிறைகளுக்கு அருகில் மெதுவாக நகரும் கடிகாரங்கள் இங்கு அசைவற்று நின்றுவிடும். காலம் உறைந்து விடும். வெளி, தன் பங்கிற்கு அந்நிறையை நோக்கி ஒரு நீண்ட குகை என விரிந்து, இந்த விசித்திர கோளத்தின் அருகே ஒரு கிழிசலாகிறது. அவ்விடத்தில், இரு புள்ளிகளுக்கு நடுவே தொலைவு என்பது முடிவற்றது. வெளி இழுத்துக் கிழிக்கப்பட்டது போல தோன்றுகிறது.
காலம் உறைவது, வெளி கிழிவது… இது வினோதமானதாக, சாத்தியமற்றதாக ஒலிக்கிறது. இது ஒரு மூடத்தனம் – அபத்தமான இந்த வெளி நிஜ உலகில் இருக்க முடியாது என்னும் புரிந்துகொள்ளக்கூடிய முடிவிற்கு ஐன்ஸ்டைன் வந்தார்.
உண்மையில், கணக்குப் போட்டால், இவ்வாறான ஒரு வெளியை உண்டாக்க நிறையை, நம்ப இயலாத அளவிற்கு நசுக்கிச் சுருக்க வேண்டும். உதாரணமாக, பூமியைச் சுற்றி இத்தகைய வெளியை உண்டாக்க, பூமியை ஒரு பிங்-பாங் பந்தின் அளவிற்குச் சுருக்க வேண்டும். அபத்தம்! ஆர்வமிழந்த ஐன்ஸ்டைன், விசித்திரமான இந்த கூட்டை உண்டாக்கும் அளவிற்கு நிறையை அழுத்திச் சுருக்க இயலாது என்னும் முடிவுக்கு வந்தார்.
இங்குதான் ஐன்ஸ்டைன் தவறிழைத்தார். தனது சொந்த சமன்பாடுகள் மீதே அவருக்கு போதிய நம்பிக்கை இல்லை. தனது சொந்த தேற்றத்தின் விசித்திரமான முடிவுகளை நம்பும் தைரியம் அவருக்கு இல்லை. நமக்கு இப்போது நன்றாகத் தெரியும் : இத்தகைய அழுத்தம்கூடிய நிறைகள் (Concentrated mass) உண்மையில் உள்ளன. சொல்லப் போனால், விண்ணில் அவை கோடி கோடிகளாக இருக்கின்றன. அவற்றைத் தான் கருந்துளைகள் என அழைக்கிறோம்.
சில கிலோமீட்டர்கள் விட்டம் தொடங்கி சூரியக் குடும்பம் அல்லது அதை விட பெரிதான அளவில் பிரம்மாண்டமாக என பல்வேறு அளவுகளில் இவற்றை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிறிய அளவிலானவையும் (ஓரு பிங்-பாங் பந்து அளவிலாக) இருக்கலாம். மேலும் மிகச் சிறிய அளவிலானவையும் (ஒரு முடி இழையின் அளவு கொண்டவையாக) இருக்கலாம். நாம் இன்னமும் அவற்றை பார்க்கவில்லை. இன்னமும்.
வானில் காணப்படும் மிகப் பெரும்பாலான கருந்துளைகள் எரிந்து அணைந்த விண்மீன்களிலிருந்தே தோன்றின. மிகக் கனமான, அதாவது எரிவதை நிறுத்திய கணமே தனக்குத் தானே உள்ளொடுங்கி அழியும் அளவிற்கு கனமான விண்மீன்கள் அவை. ஹைட்ரஜானாலான விண்மீன்கள் அதை எரித்து ஹீலியமாக மாற்றுகின்றன. இதில் வெளிப்படும் வெப்பம் விண்மீனின் எடையை சமப்படுத்தும் அழுத்தத்தை உண்டாக்கி, தானே தன் எடையால் நசுங்கி அழிவதைத் தடுக்கிறது. இதனால், ஒரு விண்மீன் கோடிக்கணக்கான ஆண்டுகள் நின்றெரிந்து வாழ்கிறது.
ஆனால் எதுவும் சாஸ்வதமானதல்ல. இறுதியில், விண்மீனில் உள்ள ஹைட்ரஜன் முற்றாக எரிந்து ஹீலியம் மற்றும் எரிய முடியாத பிற சாம்பல்களாக மாறி, எரிபொருள் இல்லாத வண்டி என விண்மீனை மாற்றி விடும். அதன் வெப்பம் குறையத் தொடங்கி எடையின் வீச்சு அதிகரிக்கும். ஈர்ப்பு விசையின் விளைவாக தமக்குள்ளேயே நசுங்கத் தொடங்கும். பொதுவாகவே பெரு விண்மீனின் அபரிதமான ஈர்ப்பு விசை – விண்ணளாவிய மலைகளுமே தாக்குப்பிடிக்க முடியாதவை – காரணமாக இனி எந்தத் தடையும் இல்லாமல் விண்மீன் தனக்குத் தானே உள்ளொடுங்கி நசுங்கத் துவங்கும். இந்த ஒடுக்கம் அதன் ‘உள்மைய விளிம்பு’ (horizon) வரை செல்லும். இவ்வாறாக ஒரு கருந்துளை உருவாகிறது.
OOO
இந்த செயல்முறை எல்லாம் புரிந்துகொள்ளப்படுவதற்கு வெகுகாலம் முன்பு 1928ல், வானொலி தொலைத்தொடர்புகளில் காணப்படும் இரைச்சல்களை ஆராய,பெல் நிறுவனம் கார்ல் ஜேன்ஸ்கி (Karl Jansky) என்னும் இயற்பியலாளரைப் பணியமர்த்தியது. ஜேன்ஸ்கி முற்றிலும் பயனற்ற, முப்பது அடி நீளமுள்ள அலைவாங்கியை (antenna) உருவாக்கினார். எந்தத் திசையிலும் திருப்பக்கூடிய, உலோக தண்டுகளின் விசித்திரமான இணைப்புத் தொகுதி வாகனம் மீது அமைந்திருக்கும். அவரது சகாக்கள் அதை ஜேன்ஸ்கியின் ரங்கராட்டினம் என அழைத்தனர். அதன் நிழற்படம் இது:
இந்த அலைவாங்கியை வைத்துக் கொண்டு, கிடைக்கக் கூடிய அனைத்து வானொலி சமிக்ஞைகளையும் (radio signals) ஜேன்ஸ்கி பதிவு செய்யத் தொடங்கினார் : இடி மின்னல், ரேடியோ அலைவாங்கிகள் எழுப்பும் இரைச்சல், இத்யாதி. மற்றவற்றுடன் சேர்த்து, ஆர்வமூட்டும்விதமாக ஒரு தொடர் சமிக்ஞையும் கண்டுபிடிக்கப்பட்டது. ராட்டினத்தின் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் ஒருவகையான சீறல் பதிவானது.
தங்கள் தந்தை, திரும்பத் திரும்ப ‘ஒன்றுவிடாமல் ஆராயுங்கள்’ என ஊக்கமூட்டியே குழந்தைகளை வளர்த்ததாக ஜேன்ஸ்கியின் சகோதரி குறிப்பிடுகிறார். ஓராண்டுக்கும் மேலாக அச்சீறலை ஜேன்ஸ்கி ஆராய்ந்தார். ஒவ்வொரு இருபத்து நான்கு மணி நேரத்திற்கும் அதன் அழுத்தம் ஏறி இறங்கியது. தினமும் ஒரு தடவை நம் தலைமேல் கடந்து செல்லும் சூரியனிலிருந்து அது வருவதாக அவர் எண்ணினான். ஆனால், தொடர்ந்து நோக்குகையில், சமிக்ஞையின் அழுத்தம் ஏறி இறங்கும் கால அளவு இருபத்து நான்கு மணிநேரம் அல்ல – இருபத்து மூன்று மணி ஐம்பத்தாறு நிமிடங்கள் எனத் தெரிய வந்தது. அதாவது, தினமும் ஒரே நேரத்தில் அந்த சமிக்ஞை வலுவாக இருக்கவில்லை. வேகமாக ஓடும் கடிகாரம் என, அது முன்னால் நகர்ந்து கொண்டேயிருந்தது. இந்த சமிக்ஞைகள் சூரியனிலிருந்து வரமுடியாது. சூரியனால் நாட்களைவிட வேகமாக ஓட முடியாது.

ஆனால் விண்மீன்களால் முடியும். சக வானியலாளர் கூறியபடி, விண்மீன்கள் நம்மை சுற்றி வலம் வர எடுத்துக் கொள்ளும் நேரம் சரியாக இருபத்து மூன்று மணி ஐம்பத்தாறு நிமிடங்கள். (பூமியும் சூரியனும் ஆண்டுக்கொரு முறை தங்களைச் சுற்றி சுற்றி நடனமிட்டு மேற்கொள்ளும் திருப்பம் காரணமாக விண்மீன்கள் சூரியனை விட குறைவான நேரத்தை எடுத்துக் கொள்கின்றன). இந்த மர்மமான ஒலி சமிக்ஞைகள் விண்மீனிலிருந்தே வருகின்றன! அதன் திசையைக் கண்டறிவது எளிதானது. சமிக்ஞை வலிமையாக இருக்கும் நேரம், அலைவாங்கிகள் எத்திசை நோக்கி திருப்பப்பட்டுள்ளனவோ அத்திசை விண்மீன்களிடமிருந்து அவை உருவாகின்றன. விண்மீன் வரைபடத் தொகுதியைத் வைத்துப் பார்த்ததில், நமது பால்வீதியின் ன் மையத்தில் இருந்தே வந்திருக்க வேண்டும்….
நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ‘பால்வீதியின் மையத்தில் இருந்து வரும் புதிய ஒலி அலைகள்’ என்னும் தலைப்பில் செய்தியாக வரும் அளவுக்கு இது பரபரப்பான தகவலாக இருந்தது. 1933 மே மாதம் பதினைந்தாம் தேதி, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் செவிகொடுக்க, என்பிசி நிறுவனம் விண்மீனின் அந்த சீறலை, ஜேன்ஸ்கியின் நேர்காணலுடன் நேரலையாக ஒலிபரப்பியது. “கனவான்களே கனவதிகளே, மாலை வணக்கம். இன்றிரவு சூரியக் குடும்பத்திற்கு வெளியே விண்மீன்களுக்கிடையில் எங்கிருந்தோ வரும் ஒலி சமிக்ஞைகளை நேரடியாகக் கேட்போம்…”. பால்வீதி மண்டலத்தின் மையத்தில் இருந்து சமிக்ஞைகள் வருவதை நேயர்களுக்கு ஜேன்ஸ்கி விளக்கினார். வர்ணணையாளர், “முப்பத்து மூன்றாயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து வரும் சமிக்ஞைகளின் ஆற்றல் அளவற்றது. பூமியில் உள்ள எந்த வானொலி நிலையத்தை விடவும் கோடி கோடி மடங்கு வலிமையானது…” என்றார்.
அதற்குச் சரியாக ஐந்து நாட்களுக்கு முன்பு, பெர்லினின் ஓபர்ன்ப்ளட்ஸில் (opernplatz) நாஸிக்கள் அவர்களுடைய மாபெரும் நூல் எரிப்பினை நிகழ்த்தினர். எரிக்கப்பட்ட பல்வேறு பிரதிகளில் விளாடிமர் மயகாவ்ஸ்கியின் ( “எனது சொற்கள் உன்னை வந்தடையும்…. இறந்த விண்மீனின் ஒளி வந்தடைந்தைப் போலில்லாமல்”) ஆக்கங்கள் இருந்தன. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நூல்களும் அவரைப் பற்றிய நூல்களும் இருந்தன. தொன்னூறு வருடங்களுக்குப் பிறகு, அந்நூல்களின் சிந்தனைகளின் பயனாக, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் கேட்ட, மர்மமான அச்சீறல் என்ன என்பது நமக்கு தெரிகிறது. பால்வீதியின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையினுள் வீழ்வதற்கு முன்னால் அதைச் சுற்றி அதிவிரைவாக சுழலும் ஒளிமிகு நிறையிலிருந்து எழும் கதிர்வீச்சே அது. பூமியை சுற்றும் நிலவின் சுற்றுப்பாதையைவிட பத்து மடங்கு பெரிதானது ஒரு கருந்துளை. சூரியனைவிட நாற்பது லட்சம் மடங்கு கூடுதல் நிறைக் கொண்டது.
மூன்றாவது முறையாக இந்நூலின் திருத்தலில் இருக்கிறேன் – சரியாக இன்று இந்த கருந்துளையின் புகைப்படத்தை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். துளையைச் சுற்றி சுழல்கிற எரியும் பொருளினை அப்படம் காட்டுறது. நூறாண்டுகளுக்கு முன்பு ஜேன்ஸ்கியின் அலைவாங்கி பதிவு செய்த அதே கதிர்வீச்சை இப்பொருளை உருவாக்குகிறது.
இந்தப் புகைப்படம் என்னை ஆழமாக அசைத்துவிட்டது. இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலேயே வாழ்நாள் முழுவதும் கருந்துளைகளைப் பற்றிய ஆய்வில் இருந்தேன். இதோ, அதன் காட்சி ஆவணம் இங்கிருக்கிறது. பல்கலைக்கழக மாணவனாக இக்கருந்துளைகளினால் வசீகரிக்கப்பட்டிருந்தபோது இதை என்னால் கற்பனைக்கூட செய்திருக்க முடியாது.
இருபது வருடங்களுக்கு முன்பு, கருந்துளையின் இருப்பை சந்தேகப்படுவோர் பலர் இருந்தனர். 2000ல் அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்கு புலம் பெயர்ந்த போது, எனது புதிய துறைத் தலைவர் “நீங்கள் கருந்துளை உண்மையிலேயே இருப்பதாக நம்பவில்லை – இல்லையா?” என்றார். இன்று அவர் மனதை மாற்றிக் கொண்டார். இது விமர்சனமல்ல – உண்மையில் அறிவியலின் அழகே இது தான் . நாம் தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்போமேயானால் நமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. மிகச் சிறந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டே இருந்தனர் – ஐன்ஸ்டைன் போல.

மேற்கண்ட படத்தில், நிஜமான கருந்துளை அல்லது அதன் விளிம்பு – கருந்துளையை சுற்றி மூடுகிற வினோத பரப்பை நாம் அப்படிதான் அழைக்கிறோம் – தன்னைச் சுற்றி சுழலும் கனல் மிகுந்த பொருளின் மத்தியில் ஒரு சிறிய, கருப்புத் தட்டாக உள்ளது.
நாம் உள்ளே செல்வதற்கான வழி அது.