வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

குட்டி இளவரசன் – எஸ். ராமகிருஷ்ணன்


குட்டி இளவரசன் – எஸ். ராமகிருஷ்ணன்





இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றான குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம்.


அந்துவான்த் செந்த் எக்ச்பெரி ( Antoine de Saint-Exupery)பிரெஞ்சு எழுத்தாளர். இவர் விமான ஒட்டியாக ராணுவத்தில் பணியாற்றியவர்.

இவர் ஒரு முறை விமானகோளாறு காரணமாக சகரா பாலைவனத்தில் அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் தரையிறங்கினார். அங்கே மனிதர்கள் யாருமேயில்லை . கண்ணுக்கு எட்டிய வரை மணல். இயற்கையின் விநோதம் விரிந்து கிடந்தது. ஒரு நபர் ஒட்டும் விமானம் என்பதால் துணைக்கும் யாருமில்லை.

பகலிரவாக எங்கே போவது என்று தெரியாமல் ஆகாசத்தையும் காற்றையும் மணலையும் பார்த்தபடியே கிடந்தார்.  அந்த நாட்களில் அவர் மனது அடைந்த திகைப்பு, பரவசம், பயம், கற்பனை அவருக்குள் ஆழமான மாற்றத்தை உருவாக்கியது.

1923 ராணுவத்தை விட்டு வெளியே வந்த பிறகு  எழுதுவதில் ஆர்வமாகி தனது முதல்புத்தகத்தை 1925 ஆண்டு வெளியிட்டார். 1944 கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தில் சென்ற போது அவரது விமானம் ஆகாசத்தில் திடீரென தொடர்பிலிருந்து மறைந்துபோனது. தனது கதையில் வரும் குட்டி இளவரசனை போல எக்ச்பெரி  வாழ்வும் என்ன ஆனது என்று தெரியாத மர்மமாகவே முடிந்து போனது.

 இன்று வரை அவரது மரணம் உறுதி செய்யப்படவில்லை. அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதன் துண்டுகள் சமீபத்தில் கண்டு எடுக்கப்பட்டன. ஆனால் எக்சுபெரி என்னவானார் என்பது துல்லியமாக அறியமுடியவில்லை.

இவரது இலக்கிய சேவையை சிறப்பிக்கும் விதமாக பிரெஞ்சு தேசம் ஐம்பது பிராங்க் நோட்டில் அவரது கதையில் வரும் குட்டி இளவரசன் மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.

எது குட்டி இளவரசனை திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது.

குழந்தைகள் புத்தகம் என்று பொது அடையாளம் சூட்டப்பட்ட போதும் எக்சுபெரியின் நாவல் வாழ்வின் ஆழமான உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் தத்துவார்த்தமானவை. வாழ்வின் புதிர்தன்மையையும் அபத்தத்தையும் விவரிப்பவை. உலகை எந்த மனத்தடையும் அற்று நெருங்க சொல்பவை.

சுயசரிதை தன்மையுடன் துவங்குகிறது நாவல். எனக்கு ஆறு வயதான போது ஒரு அற்புதமான படத்தை கண்டேன். அது ஒரு காட்டுவிலங்கை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பதை காட்டியது. அந்த படத்தை கண்டதும் அது போல ஒன்று வரையலாமே என்று நானும் ஒரு சித்திரம் தீட்டினேன். என்னுடைய படத்தை பெரியவர்களிடம் காட்டிய போது அவர்கள் ஒருவருக்கும் புரியவில்லை. அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது

பெரியவர்கள் ஒரு போதும்  எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போதும் ஒயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பு தருவதாக இருக்கிறது.

என்று ஆரம்பிக்கிறது நாவல்.


விமான ஒட்டியாக உள்ள கதை சொல்லி ஆறு வருசங்களுக்கு முன்பு விமானம் பழுதடைந்து ஒரு பாலைவனத்தில் விமானத்தை இறக்குகிறான். அங்கே  துணைக்கு யாருமேயில்லை.  வாழ்வா சாவா என்ற பிரச்சனையில் தனியே  தடுமாறுகிறான். தற்செயலாக விடியலின் போது ஒரு சின்ன குரல் அவனை அழைக்கிறது. அது குட்டி இளவரசனின் குரல். அழகான சிறுவயது தோற்றம்.

அவன் தனக்கு ஒரு  ஆட்டுக்குட்டியை வரைந்து தரும்படியாக கேட்கிறான். சின்ன பையனாக இருக்கிறான். இங்கே எப்படி வந்தான் என்று புரியாமல் அவன் கேட்டபடியே ஒரு ஆட்டுகுட்டியின் படம் வரைந்து தருகிறான் விமானி..  அந்த சிறுவன் வேறு ஒரு கிரகத்திலிருந்து வந்திருப்பதை அறிந்து  அவனிடம் விசாரிக்கிறான். சிறுவன் தான் எங்கிருந்து வந்தேன் என்பதை சொல்ல துவங்குகிறான்.

அந்த சிறுவனின் கிரகம் ஒரு வீட்டினை காட்டிலும் சற்றே பெரியது. அவன் தன்னுடைய கிரகத்தில் ஒரே நாளில் நாற்பத்து மூன்று முறை சூரியன் மறைவதை பார்த்ததாக சொல்லியபடியே ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும் போது சூரிய அஸ்தமனங்கள் மனத்துக்கு பிடித்திருக்கிறது என்று சொல்கிறான்.

குட்டி இளவரசன் பூக்களோடு பேசுகிறான். சித்திரத்தில் உள்ள ஆடு என்ன சாப்பிடும் என்று கவலை கொள்கிறான். மலருக்கு ஏன் முள் தேவைப்படுகிறது என்று சிந்திக்கிறான். தனி ஒருவனாக கிரகத்தில் அவன் வாழ்வதால் அந்த கிரகத்தை சுத்தம் செய்வது முதல் சகல வேலைகளையும் அவன் ஒருவனே செய்கிறான்.

 ஒரு வேலையை தேடிக் கொள்ளவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் தன்னை சுற்றிய சிறு கிரகங்களை நோக்கி அவன் பயணம் செய்ய  துவங்கினான்.

முதல் கிரகத்தில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் குட்டி இளவரசனை கண்டதும் ஆகா இதோ ஒரு குடிமகன் என்று உற்சாகமாக வரவேற்று  தன் அதிகாரத்தை காட்ட துவங்குகிறான். இன்னொரு கிரகத்தில் ஒரு தற்பெருமைகாரனை சந்திக்கிறான். அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். மற்ற கிரகத்தில் ஒரு பிசினெஸ்மேன். ஆறாவது கிரகத்தில் ஒரு வயதான எழுத்தாளர் . இப்படி அவன் சந்தித்த மனிதர்கள் யாவரும் அவனை தனது வேலையாள் போல அபத்தமாகவே நடத்துகிறார்கள்.

ஏழாவதாக அவன் பூமிக்கு வருகிறான். அங்கே ஒரு பாம்பை சந்திக்கிறான். அது அவனோடு பேசுகிறது. மனிதர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று குட்டி இளவரசன் கேட்ட போது பாம்பு மனிதர்கள் தங்களது இருப்பிடத்திலும் தனியாகவே இருக்கிறார்கள் என்று சொல்கிறது. வழியில் ஒரு மலரை சந்தித்து அதன் சுகதுக்கங்களை கேட்கிறான். வழியில் ஒரு நரியை சந்திக்கிறான்.

நரி அவனிடம் சொல்கிறது இதயத்திற்கும் பார்வை உண்டு. அது கண்களுக்கு தென்படாததை பார்க்க முடியும் என்கிறது

அதனால் நரியோடு நட்பு கொள்கிறான் . அதன்பிறகு விமானஒட்டியை சந்தித்து அவனுடன் பழகி நட்பாகிறான். தனது தனிமையயை விமான ஒட்டி குட்டி இளவரசனோடு கழிக்கிறான்.


குட்டி இளவரசன் வானில் உள்ள நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல. அவை கண்ணுக்கு தெரியாத சிரிப்பு. அதை நீ உணர வேண்டும் என்று கற்று தந்துவிட்டு பிரிந்து போய்விடுகிறான். உயிர்தப்பி சொந்த ஊர்  வந்த விமானி தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை. அந்த குட்டி இளவரனையும் அவன் உலகின் மீது கொண்டுள்ள பற்றையும் நினைவில் கொண்டபடி அவன் மறுமுறை வரக்கூடும் என்று ஏக்கத்துடன் காத்திருப்பதோடு முடிகிறது

அதிக திருப்பங்கள். கதாபாத்திரங்கள் கிடையாது. குட்டி இளவரசன் பல நேரங்களில் ஒரு தீர்க்கதரிசியை போல நடந்து கொள்கிறான். ஒரு மலரை பாதுக்காப்பாக காப்பாற்ற தெரியாத மனிதர்கள் எப்படி பூமியை காப்பாற்றுவார்கள் என்று கேட்கிறான்.

அது போலவே ஆயிரக்கணக்கான ரோஜா வளர்க்க தெரிந்த மனிதனுக்கு ஒரு ரோஜாவினை கூட புரிந்து கொள்ள முடிந்ததில்லை என்று ஆதங்கம் கொள்கிறான். இயற்கை மனிதனுக்கு என்னவெல்லாம் தந்திருக்கிறது. அதை மனிதர்கள் எப்படி கண்டுகொள்ளாமல் சிதைக்கிறார்கள் என்பதையே நாவல் விவரிக்கிறது

குட்டிஇளவரசன் மிக நவீனமான ஒரு கதாபாத்திரம். அவனால் எலி நரி போன்றவற்றை எளிமையாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்களை புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் ஒருவரிடமிருந்து மற்றவர் விலகி போகவும் துண்டிக்கவும் தான் முயற்சிக்கிறோம். ஒருவரோடு ஒருவர் உறவை ஏற்படுத்திக் கொள்ள விருமபுவதில்லை என்கிறது நரி. அது தான் எக்சுபரியின் குரல்.

96 பக்கங்களே உள்ள இந்த சிறிய நாவல்  ஆழமான மனப்பாதிப்பை உருவாக்க கூடியது.

 பெரியவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் . அவர்களுக்கே இது சமர்பணம் என்று நாவலின் முகப்புரை கூறுகிறது.

திரைப்படம், குழந்தைகள் திரைப்படம்,, நாடகம் . இசைநாடகம், தொலைக்காட்சி தொடர், காமிக்ஸ்,ரேடியோ நாடகம் என்று நாற்பதுக்கும் மேற்பட்ட வடிவங்களில் குட்டி இளவரசன் மாற்றம் கண்டுள்ளது.

நமக்குள் உள்ள சிறுவனை விழிப்படையச் செய்வதற்காக ஒரு முறை  அவசியம் குட்டி இளவரசனை வாசியுங்கள். கவித்துமான அனுபவத்தை பெறுவீர்கள்.

The Little Prince- Antoine de Saint-Exupery- France- Gallimard- 1943

***

Adayar and me....


6 Min Read

மரங்களடர்ந்த பெசன்ட் நகர் சாலையில் நடக்கிறதெல்லாம் செம ஃபீல்! - சென்னையும் நானும்

அன்றிலிருந்து சென்னையை விட்டு வரும் வரை அடையாரில் தான் வாசம். வேலை கிடைத்து கம்பெனி மாறிய போதும், கம்பெனியில் கிளைகள் மாறிய போதும், அடையாருக்குள்ளேயே விடுதி மாறிய போதும் அடையாரை விட்டு வேறெங்கும் மாறவேண்டிய தேவை ஏற்படவில்லை.

Published:
Updated:
சித்தரிப்புப் படம்
சித்தரிப்புப் படம்
Google Preference

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

2002 டிசம்பரில், எம்சிஏ ப்ராஜெக்ட் ட்ரைனிங்கிற்காக அடையார் மத்திய கைலாஷ் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது தொடங்கியது என்னுடைய சென்னை நாட்கள். அந்த நவம்பர் மாதம் தான் கோயம்பேடு புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருந்தது.

வெளியில் இருந்து பார்ப்பதற்கும், உள்ளேயும் மிக பிரம்மாண்டமாக, அனைத்து வசதிகளுடனும் மின்னியது. “பஸ் ஸ்டேண்டே படத்துல பார்க்கிற ஏர்போர்ட் மாதிரி பளபள னு இருக்கே” னு தோணுச்சு. 

 அப்பாவுடன் வந்து விவரங்கள் கேட்டு, சேருவதற்கான நடைமுறைகளை முடித்தப்பின், திங்கட்கிழமையிலிருந்து வரசொல்லியதும், காஞ்சிபுரத்தில் சித்தப்பாவிடம் விட்டுட்டு அப்பா ஊருக்கு போய்ட்டாங்க. முதல் நாள் அடையார் டெப்போ பக்கத்தில் உள்ள விடுதிக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு, பேருந்தில் ஏறி “மத்திய கைலாஷ்” நிறுத்தத்தில் இறங்கி கம்பெனியில் விட்டுட்டு “சாயந்திரம் வந்து அழைத்துக் கொண்டு செல்கிறேன்” என்று சொல்லிட்டு போனாங்க.

மத்திய கைலாஷ் கோயில், அடையாறு
மத்திய கைலாஷ் கோயில், அடையாறு

சாயந்திரம் அவங்க வர லேட் ஆனதுனால “சரி நாமளே ஹாஸ்டல் போவோம்” அப்படின்னு பேக் ஒன்னு மாட்டிகிட்டு கம்பெனி ல இருந்து அடையார் டெப்போ பக்கத்துல உள்ள விடுதிக்கு பஸ் ரூட்லயே வழி முழுவதும் ஆவென்று வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தே சென்றதில் தொடங்கியது சென்னையில் என் நடை பயணம். விடுதிக்கு போனா எங்க சித்தப்பா பதட்டத்துடன் வாசலில் காத்திருந்தார்கள்.

கம்பெனில போய் பாத்துட்டு நேரா விடுதிக்கு(பஸ்ல) வந்து பார்த்தா நான் இல்ல. அப்போ கையில் செல்போனும் கிடையாது. வேலைக்கு சென்று சில மாதங்கள் கழித்து தான் போன் வாங்கினேன். அவ்ளோ ஈஸியா எதுக்கும் பதட்டமடையாத எங்க சித்தப்பாவை பயங்கரமான பதட்டத்தில் ஆழ்த்திய பெருமை என்னையே சேரும். “சித்தப்பா” அப்படின்னு கூப்பிட்டு சிரிச்ச உடன் அவங்க முகத்துல வந்த நிம்மதி கலந்த ஆசுவாச சிரிப்பு இன்னும் என் மனதில் படமாக இருக்கிறது.

கம்பெனியில் இருந்து குறுக்கு வழியில் நடந்தால் விடுதியை இன்னும் சீக்கிரம் அடைந்து விடலாம். ஆனால் அது எனக்கு சரியாக தெரியாததால் பேருந்து தடத்திலேயே காலையில் வரும் போது பார்த்ததை நினைவுப்படுத்தி நடந்து வந்ததால் நேரமாயிடுச்சு சித்தப்பா அப்படின்னு சொன்னவுடன் என் முதுகில் தட்டி சிரிச்சாங்க.

“நான் ரொம்ப பயந்து போயிட்டேன்” னு அவங்க சொன்னத கேட்ட பொழுது வருத்தமா இருந்துச்சு. ஆனால் இப்போதும், அடையார் சி. எல். ஆர். ஐ ல இருந்து அடையார் டெப்போ வரைக்கும் அந்த மெயின் ரோடு ஃபுல்லா பஸ் ரூட் ல ஆர்வத்துடன் பரபரப்பான சென்னையின் மாலை வேளையை வேடிக்கை பார்த்துகிட்டே நடந்து போனது இன்னும் மிகப்பசுமையான நீங்காத நினைவுகளில் ஒன்று.

அன்றிலிருந்து சென்னையை விட்டு வரும் வரை அடையாரில் தான் வாசம். வேலை கிடைத்து கம்பெனி மாறிய போதும், கம்பெனியில் கிளைகள் மாறிய போதும், அடையாருக்குள்ளேயே விடுதி மாறிய போதும் அடையாரை விட்டு வேறெங்கும் மாறவேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் அடையார் நம்ம சொந்த ஊர் போல மனதுக்கு மிகவும் நெருக்கம்.

மரங்களடர்ந்த பெசன்ட் நகர் சாலையில் நடக்கிறதெல்லாம் செம ஃபீல்! - சென்னையும் நானும்

காந்தி நகர், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், ஆவின் பூங்காவிற்கு எதிரிலுள்ள பெசன்ட் நகர் ரோடு இங்கெல்லாம் நடந்து போறதே ரொம்ப நல்லாருக்கும். மெயின் ரோட்ல இருந்து அடையாரின் உள்ரோடுகளில், நகரத்தின் பரபரப்பின்றி, நடந்து போவது ஒரு சுக அனுபவம் தான்.

வேலை தேடி சென்னையில் பல இடங்களுக்கு அலைந்திருந்தாலும், விடுதி தேடி, வீடு தேடி அதிகம் அலைந்தது அடையாரில் தான். அதனால் அடையார் எப்பவும் “எங்க ஏரியா”. தீபாவளி, பொங்கல் விடுமுறைக்கால சென்னைக்கு தனி அழகுண்டு. ஊரே அமைதியா, ரோடெல்லாம் வெறிச்சோடி எந்த பரபரப்பும் இல்லாம இருக்கும். அப்போ எல்லாம், டிராபிக் இல்லாத, அமைதியான அதிகாலையில அடையார் பாலத்துக்கு கீழ, மரங்களடர்ந்த பெசன்ட் நகர் ரோட்ல நடக்கிறதெல்லாம், ஆனந்தமா இருக்கும்.

எங்க வீட்ல இருந்து படிக்கவும், வேலைக்கும் முதலில் மெட்ராஸ் வந்தது எங்க சித்தப்பா தான். இன்றுவரை சென்னையில் ஏதேனும் விசாரிக்க, வீடு பார்க்க, முகவரி கேட்க என்று எதுவென்றாலும் எங்கள் உறவுகளில் முதல் அழைப்பு சித்தப்பாக்கு தான். பஸ் ரூட், பஸ் நம்பர் எளிமையான வழிகள் அனைத்தும் அத்துப்படி. அதனால் சித்தப்பாவின் ஆலோசனையும் வழிநடத்துதலும் எப்போதும் இருக்கும். ஆனாலும் செல்ஃபோன் இல்லாததால் நினைத்த நேரத்தில் கேட்க முடியாது.

முதல் வார இறுதிக்கு, காஞ்சிபுரம் சென்று விட்டு ஞாயிறு மாலை கிளம்பி (கூட வருவதாக சொன்ன சித்தப்பாவிடம், “நானே போய்டுவேன் சித்தப்பா. கத்திப்பாரா ல இறங்கி, எம்49 பஸ் பிடிச்சு ஹாஸ்டல் போய்டுவேன்” னு வசனம் பேசிட்டு) எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்த போது ஒரு சம்பவமாகிவிட்டது. கத்திப்பாராவில் இறங்கி “சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற வளைவினை பார்த்தவுடன் அந்த திசையில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஞாயிறு இரவு, போக்குவரத்து, ஜன நடமாட்டம் குறைவாகவே இருந்தது. நடக்கிறேன், நடக்கிறேன், நடந்து கொண்டே இருக்கிறேன். ‘எம்49’ ம் காணோம், பஸ் ஸ்டாப்பும் காணோம். கொஞ்ச நேரத்திற்கு பிறகு தான் “ஆகா…. இது கிண்டி பஸ் ஸ்டாப் போற வழி இல்ல போலவே…. இவ்வளவு நேரம் நடக்க வேண்டி இருக்காதே….” அப்படின்னு தோணுச்சு. ஜன சந்தடியற்ற அமைதியான இரவு நேரம். கடைகளும் எதுவும் இல்லை. 

மரங்களடர்ந்த பெசன்ட் நகர் சாலையில் நடக்கிறதெல்லாம் செம ஃபீல்! - சென்னையும் நானும்

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி “கிண்டி பஸ் ஸ்டாப் போகணும்” அப்படின்னு சொல்லி ஏறி உட்கார்ந்து, வழியைப் பார்த்துக் கொண்டே வந்தால்…. நான் வந்த வழியும் இல்லை. மெயின் ரோடும் இல்லாமல் எங்கேயோ போற மாதிரி இருக்கு. “அச்சச்சோ என்னடா இது” அப்படின்னு “அண்ணா ஏன் மெயின் ரோட்ல போகாம ஏதோ ஒரு வழியில் போறீங்க” ன்னு கேட்டேன். அவர் “இல்லம்மா இப்படியே போனா சீக்கிரம் போயிடலாம்.. இதோ இப்ப வந்துரும் பாருங்க” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரத்துல பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு சிரிச்சார். அவருக்கு “தேங்க்ஸ்” சொல்லிட்டு, பஸ் ஸ்டாப்ல இருந்து இந்த பக்கம் திருப்பி பார்த்தால், கொஞ்சம் தூரத்தில் தெரிஞ்சுச்சு… அந்த “சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” போர்டின் பின்புறம்.

“அடக்கடவுளே இந்த போர்டு எல்லாப்பக்கமும் இருக்கும் போல” னு தலையில் தட்டி, சிரித்துக் கொண்டே ‘எம் 49’ பஸ்ஸைப் பிடித்து விடுதியை வந்தடைந்தேன். அறியாத ஊர். இரவு நேரம். வழி மாறி தவித்து நின்றபோது கூட, என்னை அதிகம் கலங்க விடாமல், நம்பிக்கையை கொடுத்து, நல்லெண்ணத்தை என்னுள் விதைத்த அந்த ஆட்டோ அண்ணாவிலிருந்து தொடங்கியது சென்னையில் என் நல் அனுபவங்கள். இதனால் தானோ என்னவோ, துணையில்லாமல், எந்த நேரமென்றாலும் சென்னையில் எங்கும் போக, வர(அது… நடந்து, பஸ், ஆட்டோ எதுவென்றாலும்) அஞ்சியதில்லை. எதுனாலும் பார்த்துக்கலாம் னு ஒரு எண்ணம். 

அப்படிதான் ஒருமுறை எங்க பெரிய அப்பா அலுவலக விஷயமாக ஒருவாரம் சென்னை வந்து, மந்தைவெளியில் அரசாங்கம் கொடுத்த இடத்தில் தங்கியிருந்தார்கள். இரண்டு நாள் கழித்து வீட்டிலிருந்து ஃபோன் செய்யும் பொழுது அப்பாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றதும் சிறு பதட்டம். அதனால் மாலை ஆனதும் ஊரிலிருந்து எங்க அப்பா எனக்கு போன் பண்ணி “அப்பா தங்கி இருக்கிற இடத்துக்கு போய், என்னன்னு பாத்துட்டு போன் பண்ணு” அப்படின்னு சொன்னாங்க.

நான் அலுவலகத்தில் இருந்து மந்தைவெளிக்கு வந்து சேர ஏழரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. அந்த இடம் எங்கே என்று எனக்கு தெரியவில்லை. அப்பா சொன்னதை வைத்து ஒரு ஆட்டோ பிடித்து இடத்தைச் சொல்லி போனால், மெயின் ரோடு விட்டு எங்கேயோ உள்ளார போகுது. வழியில் நிறைய தூர இடைவெளியில் பெரிய பெரிய அதிகாரிகளின் வீட்டு நேம் போர்டு இருக்கு. அதெல்லாம் பாத்துக்கிட்டு, இந்த இடத்தை விசாரித்துக் கொண்டே போனேன்.

இன்னும் உள்ள போகணும்னு சொல்லி சொல்லி, ரொம்ப தூரம் போய் அந்த இடத்தின் கடைசியில் இவர்களுக்கான அந்த பயிற்சி நிலையமும், தங்குமிடமும் இருந்தது. இந்த வழியில் ஆள் அரவமற்ற மரங்கள் அடர்ந்த இடங்கள் மிக அதிகம். அங்க போய் இறங்கி ஆட்டோவை வெயிட்டிங்ல போட்டுட்டு உள்ளார போய் அப்பாவைப் பார்த்தபோது 9 மணியை நெருங்கியிருந்தது.

அந்த நேரத்துல அங்க என்னைய பார்த்ததும் அப்பா, “எப்படிப்பா இங்க வந்த இந்த நேரத்துல” அப்படின்னு ஷாக் ஆயிட்டாங்க. “ஆட்டோல தான்பா… கேட்டுட்டே வந்தேன்” அப்படின்னு சொன்ன உடனே வந்த வழியை நினைத்து அவங்களுக்கு ஒரு பயம். அப்போதும் அவங்களுக்கு நான் சொன்ன பதில் “ஆட்டோ ல தான்பா வழி கேட்டு கேட்டு வந்தேன் ஒன்னும் பயம் எல்லாம் இல்ல.” வெளில வந்து அந்த அண்ணாவிற்கு மிகுந்த நன்றி சொல்லி என்னை ஹாஸ்டல் அனுப்பி வச்சாங்க.

ஒரு முறை நானும் என் தங்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாமாப் பெண்ணை பார்க்க அவசரமாக ஆட்டோவில் சென்றபோது, தங்கையின் கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டு விட்டோம். ஆயிரத்தி சொச்சம் பணமும், அலுவலக அடையாள அட்டை, வங்கி பண பரிவர்த்தனை அட்டைகள் என்று அனைத்தும் அதில் இருந்தது. மாமாப் பெண்ணை பார்த்த பின், சிறிது நேரத்திற்குப் பிறகு தான் கைப்பையை தவறவிட்டதையே உணர்ந்தோம்.

என்ன செய்வதென்று புரியாமல், கவலையுடன் விடுதிக்கு திரும்பினோம். ஆனால் அடுத்த நாள் மாலையே, அந்த ஆட்டோ ஓட்டுநர், விடுதிக்கு வந்து “காலையில் வேறு அவசர வேலை இருந்ததால் இப்போதாம்மா வர முடிந்தது.. எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க” என்று சொல்லி,  கைப்பையை ஒப்படைத்த போது நாங்கள் அடைந்த நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. மனப்பூர்வமான நன்றியை செலுத்தி, மகிழ்ச்சியுடன் பணம் கொடுக்க முனைந்த போது, அதை புன்னகையுடன் மறுத்து “பொருளை பத்திரமா வச்சுக்கோங்கம்மா” என்று சொல்லி சென்றதை இன்றளவும் மறக்கவில்லை. இப்படி நேரங்கெட்ட நேரத்திலும் நல்ல நம்பிக்கையான அனுபவங்களையே தந்திருக்கிறார்கள் சென்னையின் ஆட்டோ அண்ணாக்கள்.

மரங்களடர்ந்த பெசன்ட் நகர் சாலையில் நடக்கிறதெல்லாம் செம ஃபீல்! - சென்னையும் நானும்

ஒரு ஞாயிற்றுக்கிழமை, தி.நகர் பாண்டி பஜார் பக்கம் ஏதோ ஒரு அலுவலகத்தில் எழுத்துத் தேர்வு. அடையாறில் இருந்து பேருந்தில் திநகர் சென்று, நேரமாகிவிட்டதால் அங்கிருந்து ஆட்டோவில் அந்த அலுவலகத்திற்கு சென்று விட்டேன். பரீட்சைக்கு போனதால் வழியை எல்லாம் நோட் பண்ணல. எழுத்துத் தேர்வு முடிய 12 மணி ஆகிவிட்டது. “முடிவுகளை மெயில் பண்றோம்” னு சொல்லிட்டாங்க.

வெளியில வந்து பேருந்து நிறுத்தத்தை விசாரித்து… விசாரித்து… சந்து சந்தா நடந்து நடந்து… “ஹப்பா… கடைசியா ஒரு மெயின் ரோடு தெரியுது… இதுல எதாவது பஸ் ஸ்டாப் இருக்கான்னு பார்க்கலாம்” அப்படின்னு நினைத்து சந்துல இருந்து வெளியில வந்து எட்டிப் பார்த்தா… எதிர்த்தாப்புல ‘அண்ணா அறிவாலயமும், சன் டிவி சூரியனும்’ தெரியுது… “அடக்கடவுளே எங்கிருந்து எங்கடா நடந்து வந்திருக்கோம்” அப்படின்னு யோசிச்சு எனக்கே செம சிரிப்பாயிடுச்சு. அப்புறமா அங்கிருந்து 23சி பஸ் ஏறி அடையார் வந்தேன்.

ஒருமுறை ஊரில் இருந்து அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி, எல்லாம் வந்திருந்தாங்க. எங்கேயோ போயிட்டு பேருந்து நிறுத்தத்துக்கு போகணும். ஆட்டோ அந்த நேரத்துல கண்ல படல. சரின்னு நம்ம “நடராஜா சர்வீஸ்” ஸ்டார்ட் பண்ணேன். தம்பி கேட்டான், “இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்? பஸ் ஸ்டாப்க்கு எவ்வளவு தூரம் இருக்கு?” உடனே நான், “பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப் வந்துடும் டா” அப்படின்னு சொன்னேன்.

இந்த கேள்வியும் பதிலும் ரிப்பீட் மோட் ல போயிட்டே இருந்துச்சு. (தூரம் கொஞ்சம் அதிகம் தான்.. ஆனா அன்னைக்கு ஆட்டோ எதுவுமே அந்த நேரத்துல இல்ல.. அதனால அவங்களையும் நடக்க வைக்க வேண்டியதாயிடுச்சு). ஹாஸ்டல் வந்தவுடனே, தம்பி, என் ஃபிரண்டு கிட்ட “எவ்வளவு தூரம் எங்களை நடக்க வச்சுடுச்சு தெரியுமாக்கா? பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. னு சொன்னுச்சுக்கா. ஆனா பாலம் ஏறுது… ஏறுது… ஏறுது… இறங்கவே மாட்டேங்குதுக்கா” அப்படின்னு சொல்ல.. அவன் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்து விட்டோம். “என்னையும் இந்த பொண்ணு இப்படித்தான் தம்பி நடக்க வெச்சிருக்கு.. உங்களையுமா?” அப்படின்னு ஃபிரண்டும் சொல்லி ஒரே புலம்பல். எனக்கு சிரிப்பு. 

இப்ப கூட, நான் “நடக்கிற தூரம் தான்” அப்படின்னு சொன்னேன்னா.. உடனே என் தம்பி மத்தவங்கள அலர்ட் பண்ணிடுவான். “என்ன டிஸ்டன்ஸ்னு கரெக்ட்டா பாத்துக்கங்க.. இல்லன்னா.. இது, ‘பாலம் ஏறி இறங்குனா பஸ் ஸ்டாப்’ னு சொல்லி சொல்லியே நம்மளை எக்கச்சக்கமா நடக்கவச்சிடும்” அப்படின்ற கிண்டல் இப்ப வரை தொடர்கிறது. சென்னை தந்த நல் அனுபவங்களும் நினைவில் நீங்காத, எப்போதும் தொடரும் தொடர்கதை தான்.

தேர்தல்
தேர்தல்
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.

புதன், 11 பிப்ரவரி, 2026

கரையெல்லாம் செண்பகப் பூ.

சுஜாதா: என்ன வகை எழுத்து?      
--
புதுமைப்பித்தன் 'சாபவிமோசனம்'
போலவோ,தி.ஜானகிராமனின் 'சிலி
ர்ப்பு'போலவோ கு.ப.ரா வினுடைய ' ' "விடியுமா?போலவோ,கு.அழகிரிசாமி
யின் கதைகள் போலவோ சுஜாதாவின்
வாசகனுக்கு எதிர்பார்ப்பில்லை‌.எழுத்தி
ற்கேற்ப தன் வாசகர்களைக் கச்சித
மாகத் தயாரித்து வைத்திருந்தார்.

ஒரு கதையில் ஆம்பிளைங்க செய்
யற  அத்தனை காரியத்தையும் இந்த பெண்களால் செய்யமுடியுமா' என்று
கேட்டார்.ஆணைப்போலப் பெண்ணா
ல்  உயரத்திற்கு ஸ்விங்..என்று ஒண்
ணுக்கடிக்கமுடியுமா என்று கேட்டார்.
இது நகைச்சுவை.   பின்னால் ஒரு சினிமாவில் அவர் எழுதிய வசனமாக
வும் வந்தது.இந்தமாதிரி வசனங்களு
க்காகவே எழுத்தாளர் சாவி அவரைத்
தூக்கிவைத்துக் கொண்டாடினார்.40
வருஷம் அதிதிரளான வாசகர்களைத்
தன் மடியில் உட்கார்த்தி வைத்துக்
கொண்டிருக்க முடிந்தது சாதனை
தான். "என் வீட்டு சலவைக் கணக்குத்
துண்டுப் பேப்பரை வாங்கிப் பிரசுரிக்
க பத்திரிகை இருக்கிறது என்று ஸ்டே
ட்மெண்ட் விடுமளவிற்குப் பிரபலப்
படுத்திக்கொண்டார்.சாவி அவரது
சலவைக் கணக்கு நோட்டுப் புத்தகக்
குறிப்புகளையும் தன் பத்திரிகையில்
வெளியிட்டார் என்பதுண்டு.

அதேநேரம் இன்னொருவேலையை
யும் உடன் செய்துகொண்டிருந்தார்.பார
தியின் "காக்கைப் பார்லிமெண்ட்" நம்
புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்த
சாமிப்பிள்ளையும்" போன்ற படைப்பு
களையும் அவ்வப்போது பேசிவந்தார்.
"காசளவில் உலகம்" என்ற கதையை
யும் அப்போதுதான் வெளியிட்டார். 

சுஜாதாவிற்குக் கைக்கொடுத்தவை சிறுகதைகள்தாம்.அவ்வப்போது நிக
ழும் நிகழ்ச்சிகளைத் துண்டு துணுக்
குகளாக்கிச் சுவாரசியப் படுத்தினார்.
இடைவெளி ஏதுமில்லாமலிருக்க இந்தத்துணுக்குகள் உதவின.நடுத்தர
வர்க்கங்களின் பிரச்சனைகள்தாம்
தேசத்தின் பிரச்சனைகள்.தேசத்தை
வெறுப்பதற்கும் ஆனந்திப்பதற்கும்
நிறைய விஷயங்கள் இவருக்கு அரு
கிருந்தன.கொண்டாடுவது அல்லது
துயரத்தில் ஆழ்ந்து புலம்புவது என
" ரெண்டுங்கெட்டான்தனம்" நடுத்தர
வர்க்கத்தின் வாழ்வியல் அடிப்படை.
சுஜாதா இதைக் கெட்டியாகப் பிடித்து
க்கொண்டார்.

அவரது கதைகளில்"சில வித்யாசங்க
ள் முக்கியமான கதை.'நான் ராஜாரா
மன் டில்லிவாசி நேபாளத்தின் தலை
நகரம் தெரியாததாலும் ஆஸ்ரேலியா
வின் ஜெனத்தொகை தெரியாததாலு
ம் ஐஏஎஸ் தொடராமல் மத்தியசர்க்கா
ர் செக்ரட்டேரியட்டில் ஒரு சாதாரண
210-10-290-15-150 சம்பள ஏணியில்
இருப்பவன் என்று தொடங்குகிறார்.
அட.. ..இது நம் கதை என வாசகனும்
விழுந்தடித்துக் கொண்டு வருகிறான்.

கொஞ்சம் நேரமிருந்தால், மனசிருந்
தால் சிறுபத்தியை தட்டி நீட்டி  ஒரு
புதினமாக ஆக்கிவிடலாம்.தத்துவத்
தேடல்களோ ஆழ்மனப் பிரச்சனை களோபிரதானமல்ல.மனிதனின் வெ
ற்றிகரமான அனுபவங்களோ பெரிதி
ல்லை.எதையும் வாசகனிடம் கொடு
த்து படிக்க வைத்து விடுவது. இதை
அறிவித்துவிட்டே எழுதினார்.

புதுமைபித்தனைப் படித்ததும் சுதந்தி
ரமாக அவருடைய பாதிப்பு இல்லாமல்
எழுதத் தைரியம் வேண்டும்.நன்றாக
எழுதபவர்களின் பட்டியலில் உள்ள
அனைவரிடமும் புதுமைப்பித்தன்
பாதிப்பு இருப்பதை எந்தக் கோர்ட்டி
லாம் சாட்சியாகச் சொல்லத்தயார்
என்றார்.நல்லஎழுத்து கைவசப்பட்டும்
வலிந்தே ஜனரகப்படுத்தினார்.அறிவி
யல் வளர்ச்சிக்கேற்ப கலைகளையும்
இலக்கியங்களையும் மாற்றியமைக்
கும் முயற்சி இருந்தது.

எழுத்து என்பது தினம்தினம் உட்கார்
ந்துகொண்டு கட்டாயமாக எழுதுவது,
நெஞ்சிலிருக்கும் மேதைத்தனம் என்ற ஜீவஒளிக்குக்   காத்திருப்பது அன்று..  திரும்பத்திரும்பத் திரும்ப அதையே
எழுதுவது,    மகிழ்ச்சியோ  வலியோ
எழுதுவது, எழுதியதில் திருப்தியில்
லாமல் நிறையக்கிழித்துப்போடுவது
எழுதியதில்  துளி திருப்தி இல்லாமல் இருப்பது, மேலே எழுதுவது சுஜாதாவி
ன் அடிப்படை எழுத்து நியாயம் என்பது
இதுதான்.அநேக பத்திரிகைக்காரர்
கள் அவர் வீட்டுத்திண்ணையில் காத்
குக் கிடந்தனர் என்பதும் உண்மையே.

வாழ்க்கை சாசுவதமான அவதானிப்பு
தான்.பாத்திரங்கள் மாறிக்கொண்டிரு
ப்பார்கள்.ஒன்றுமட்டும் உண்மை.இரு
ப்பது ஒரேபிறவி.வாழ்வது ஒரேமுறை
தான்.எனவே வாழ்க்கை ஒன்றன்று.
நிறைய தடவை நாம் இங்கு வாழ்
ந்திருக்கிறோம்.இந்த அடிப்படைதான்
சுஜாதா எழுத்தின் சூட்சுமம்‌.மின்னல்
வெட்டும் நடை என்பது இலக்கிய 
வளமை கனத்தைக் சிதைத்துவிடும்‌.
துப்பறியும் கதைகளுக்கேயுரியது.
ஆனால் இந்த மின்னல் வெட்டும் ஓரு நடைதான்  பின்னால்  நம் சுஜாதா
வின் அசல் நடையாக மாறியது.வாசக
ரோடு இந்த நடையால் மனம் விட்டுப்
பேசமுடியாது.லாசரா வாசித்த வாச
கர்களுக்கு சுஜாதா எந்தவகையிலும்
பொருத்தமற்றவர்.

தி.ஜா,எம்விவி,க.நா.சு,கு.ப.ரா,மௌனி, கு.அழகிரிசாமி,புதுமைப்பித்தன்
போன்றோரின் எழுத்துக்களை அறி
ந்திருந்தாலும் கவைக்குதவாது எனப்
புரிந்திருந்தார்.புகழுக்கோ,பெயருக்
கோ,பிராபல்யத்திற்கோ ஆகாது என்
பதில் தெளிவாக இருந்தார்.ஒரு படை
ப்பாளி புகழ்பெற விரும்புவது பிழை
யில்லை‌.எப்படி புகழடைகிறார் என்ப
துதான் மிகமிக முக்கியம்.தொண்டர்
படையின் மூலமோ, சந்தைப்படுத்து
தல் மூலமோ அதை நிறைவேற்ற
முயல்வது சரியானதா என்று கேள்வி
தவிர்க்க முடியாததுதான். கரையெல்
லாம் செண்பகப் பூ...வாசித்தபோது....
....
---
(என் கட்டுரையின் பகுதி)
--மீள்*

சனி, 17 ஜனவரி, 2026

கல்மண்டபம்

"கல்மண்டபம் " நாவலை வழக்கறிஞர் சுமதி அவர்கள் வெளியிட்டு நேற்றோடு 25 ஆண்டுகள் கடந்து விட்டன. அலையன்ஸ் பதிப்பக வெளியீடு. தமிழின் நாவல் உலகப் பிரதேசத்தில் இதுவரை யாரும் தொடுவதற்கு அஞ்சிய ஒரு கதைக் கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய சுமதியின் துணிச்சல் சாதாரணமானது அல்ல. பிராமணர்களின் இறுதிச் சடங்குகளை செய்யும் சவுண்டி பிராமணர்களின் அவல நிலையையும், அவர்களை இழிவாக நடத்தும் உயர்தட்டு பிராமணர்களையும் மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டும் நாவல் இது.இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்து விவாதங்களை எழுப்பி இருக்க வேண்டிய சுமதியின் நாவல்  கவனமாக இலக்கிய உலகத்தால் சைட்லைன் செய்யப்பட்டது.
சென்னையில் சவுண்டி பிராமணர்கள் ஒன்று சேர்ந்து வேலைக்காக காத்திருக்கும் இடம்தான் கல் மண்டபம். அதையே இந்த நாவலின் தலைப்பாக சுமதி அவர்கள் வைத்திருந்தார்.
புத்தக வெளியீட்டு விழாவில் சோ, இல. கணேசன், தமிழருவி மணியன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருடன் நானும் மேடையைப் பகிர்ந்து கொண்டு நான் பேசிய பேச்சை இன்று நினைத்துப் பார்க்கிறேன் .  
 " இந்துக்கள் தங்கள் ஜாதி விஷம் கலந்த மூச்சுக்காற்றினால் மொத்த வாயு மண்டலத்தையும் அசுத்தப்படுத்தி விட்டார்கள். அசுத்தப்படுத்தப்பட்ட அந்த காற்றை சுவாசித்த கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஜாதி நோய்க்கு ஆளாகி விட்டார்கள். நாடார் கிருத்துவர்களும் வேளாளர் கிறிஸ்தவர்களும் எங்கிருந்து வந்தார்கள்? இயேசு சொன்னதாகத் தெரியவில்லையே? லெப்பைகளும் மரைக்காயர்களும் எங்கிருந்து வந்தார்கள்? நபிகள் நாயகம் சொன்னதாகத் தெரியவில்லையே. அப்படியானால் இந்து மதம் இந்து சமூகத்தை மட்டும் கறை படுத்தவில்லை. மொத்த இந்திய சமூகத்தையும் மாசு படுத்தி இருக்கிறது." என்று மேடையில் சோ, இல.கணேசன் , தமிழருவி மணியன் ஆகியோரை வைத்துக் கொண்டு நான் பேசியதற்கு எனக்குப் பின் பேசிய அவர்கள் ஏதும் பதில் சொல்லவில்லை.
 எனக்குப் பின் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி சுமதி நாவல் பற்றி மிக அற்புதமாகப் பேசினார்.
 வேலை பளுவின் காரணமாக அடுத்த நாவலை எழுதுவதைத் தள்ளிப் போட்டு வரும் சுமதி விரைவில் தனது அடுத்த அபூர்வமான கதைக்கருவை எழுத வேண்டும் என்று எல்லா புத்தகங்களையும் தேடிப் படிக்கக்கூடிய  
 ஒரு ஓரத்து வாசகன் என்ற வகையில்
 நான் விண்ணப்பம் வைக்கிறேன்.

செவ்வாய், 30 டிசம்பர், 2025

A Poet

https://youtu.be/kxxVdYKhFk4?si=NZS-MFDDdujVFbea



சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிஞனின் கதைதான் 'A Poet'.

இதுவொரு Spanish மொழி திரைப்படம்.

Genre:Tragic comedy film.

இந்த வருடம் (2025)மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் இத்திரைப்படம் பங்கெடுத்து பரிசையும் வென்றது.

கவிஞர் கதாபாத்திரத்தில் நடித்த உபிமர்ரியாஸின் தோற்றம் ஓரளவிற்கு நமது நடிகர் நாகேஷின் தோற்றத்தை ஒத்துயிருக்கும்.

கதாபாத்திரத்திற்கேற்ற அருமையான தேர்வு இந்த நடிகர்.

Spoiler alert:வேலையில்லை;அதனால் சமூகத்தில் மதிப்புமில்லை.

மனைவியும் பெண் பிள்ளையும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

பென்ஷன் வாங்கி பிழைப்பை ஓட்டும் அம்மாவின் தயவில் வாழ்ந்து வருகிறார் கவிஞர் ஆஸ்கர்.

தீரா குடிப்பழக்கமும் உண்டு.சில வேளைகளில் நடைபாதையிலேயே தூங்கியும் விடுவார்.

பெண்பிள்ளை மீது மிகுந்த பாசம் உடையவர்.மனைவியால் அவமானப்பட்டாலும் மகளைப் பார்ப்பதற்காக செல்வார்;பேசுவார்.செலவுக்கு மகளிடமிருந்து பணமும் வாங்கிக் கொள்வார்.

இரண்டு,மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டும் தனக்கு சமூகத்தில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்கிற கவலை இவருக்கு எப்பொழுதுமே உண்டு.

"அம்மா மட்டும் இல்லேன்னா இந்த வீடு கூட உனக்கு கிடைச்சு இருக்காது"என்று சொல்லி அவமானப்படுத்துவாள் இவளுடைய சகோதரி.

இருந்தாலும் அவளே இவருக்கு ஒரு பள்ளிக் கூடத்தில் Poetry teacher வேலை வாங்கிக் கொடுக்கிறாள்.

வேலைக்கு செல்கிறார்.தனது வகுப்பில் உள்ள ஒரு மாணவியை தேர்ந்தெடுத்து கவிதையில் புலமையாக்க முயற்சிக்கிறார்.அவளும் இவருடைய முயற்சியின் மீது அக்கறை கொண்டு கவிதை எழுதுவதில் முயற்சி எடுக்கிறாள்.

கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் வாங்குகிறாள்.

அதனால், பள்ளி நிர்வாகம் சந்தோஷமடைந்து பார்ட்டி ஒன்று வைக்கிறது.

அந்த பார்ட்டியில் அந்த மாணவி மதுபானத்தை அதிகமா அருந்தி நிலைகுலைகிறாள்.வாந்தி எடுக்கிறாள்.

அவளை வீட்டில் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு இவருடையதாகிறது.

சுயநினைவேயில்லாமல் இருக்கும் அவளை தனது காரில் ஏற்றிக்கொண்டு அவளுடைய வீடு நோக்கி செல்கிறார்.

வீட்டை அடைந்தவுடன் அவள் இருக்கும் நிலையைப் பார்த்து தன் மீது சந்தேகப்படுவார்கள் என நினைத்து அவளுடைய வீட்டின் படிக்கட்டின் மீது போட்டு விட்டு செல்கிறார்.சத்தம் போட்டு வெளியே வரும் அவளுடைய வீட்டார் இவள் இருக்கும் நிலையையும் அவர் வேகமாக காரில் ஏறி செல்வதையும் பார்க்கின்றனர்.

சூழல்,அவரை அயோக்கியனாக சித்தரிக்கிறது.அவளுடைய அண்ணன் அவரை நையப்புடைக்கிறான்.

பணத்தாசை பிடித்த அந்த பண்பாடற்ற குடும்பம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரிடமிருந்து பணத்தை பிடுங்க நினைக்கிறது.

பள்ளி நிர்வாகம் பணத்தைக் கொடுத்து அவர்களை சரிகட்ட நினைக்கிறது.

இவரோ பணத்தைக் கொடுத்தால் தான் ஒரு குற்றவாளி என்பதை ஒத்துக்கொள்வது போல் ஆகிவிடும் என்று நினைக்கிறார்.

இதற்கிடையில் மகளும் தந்தையின் மீது சந்தேகம் கொள்கிறாள்.வெறுக்கிறாள்.தன்னால் அவருக்கு ஏற்பட்ட நிலையை புரிந்து கொண்ட மாணவி கவிஞரின் மகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்புகிறாள்.

தந்தையைப் பற்றி தவறாக நினைத்ததை நினைத்து வருந்துகிறாள்.

தந்தை எழுதிய புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்து படிக்க ஆரம்பிப்பதோடு படம் முடிகிறது.

இந்தப் படத்தில் கவிஞராக நடித்த Ubeimar rios-க்கு இதுதான் முதல் படம் என்பதை நம்ப முடியலே.அந்த அளவிற்கு கேரக்டரை புரிந்து கொண்டு மிகவும் இயல்பாக நடித்துள்ளார். 

Co-Produced and Directed by Simon Mesa soto.

இவர், கொலம்பியா நாட்டு திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குநருமாவார்.

இவர் இயக்கிய Leidi and Madre குறும்படங்களின் மூலம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருடைய முதல் Feature film-ஆன 'Amparo' வும் 2021-ஆம் ஆண்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

விரைவில் OTT-ல் வரும்.அவசியம் பாருங்கள்.

சேனலை மறக்காமல் Subscribe செய்யுங்கள்.கருத்துக்களை தெரிவியுங்கள்.நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நன்றி,வணக்கம்.

சே மணிசேகரன்


*****************************************
https://solvanam.com/2016/10/14/ரெயினர்-மரியா-ரில்கே-போய/?utm_source=perplexity

*****************************************
Letters to a Young Poet



நண்பரே! உலகின் மீது நாம் அவநம்பிக்கை கொள்வதற்கு எந்தக் காரணமுமில்லை. தீவிரவாதம் உள்ளதெனில் அது நம்முடையதுதான். பாதாள மெனில் அது நமக்குரியதுதான். அபாயங்கள் உள்ளதெனில் அதை நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். தனிமையை நேசிக்கவேண்டும்: அது வேதனை தருவதாக இருந்தாலும் தனிமையை ஏற்கப்பழகுவது வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரியவைக்கும். நம் போராட்டத்தின் அழகைக் கண்டறிய வேண்டும். அது உண்மையையும் ,நேர்மையையும் உணரச்செய்யும்.
நண்பரே! தீர்மானிக்கப்படாத விஷயங்களுக்கான கேள்விகள் மனதிலிருக்கும். ஆனால் அவைகளுக்கு இப்போது பதில்கிடைக்காது. பதில்களோடு வாழமுடியாத நிலை நமக்கிருப்பதால் எதற்கும் பதில் தேடாதீர்கள். எல்லாவற்றோடும் வாழவேண்டும். கேள்விகளோடு இப்போது வாழுங்கள். நீங்களே அறியாதபடி எதிர்காலத்தில் அந்த பதிலாகவே வாழ நேரலாம்
வாழ்க்கை முரண்பாடுகளால் ஆனது. பகுத்தறிவான பதிலை எல்லாவற்றிலும் எதிர்பார்த்தால் நம்மை நாமே சித்திரவதைபடுத்திக்கொள்வோம்
முழுமையற்ற அறிவுதான் ஒவ்வொரு மனிதனின் விதி என்னும் போது சுயத்தை அறியவேண்டிய வைகறையாக கேள்விகளை விரும்ப வேண்டும். நாம் யாராக இருக்கவேண்டும்,இப்படி ஏன் வாழ்க்கை என்று எல்லாவற்றி லும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு நம்மை வருத்திக் கொள்ளாமல் அந்தத் தருணத்தைத் தழுவிக் கொள்ள வேண்டும். வாழ்வது, அனுபவம் பெறுவது என்ற இரண்டும் நமக்கானவை.எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. காலப்போக்கில் பதில்கள் மேல் விழுவோம்.
நிகழ்காலத்தைவிட கனவுகள் மேலானவை என்று சொல்ல முடியாது. நிகழ் காலமும்,எதிர்காலமும் ஒன்றுதான்.நாம் எதிர்காலத்தைப் பற்றி நம்புவது நிகழ்காலத்தை மாறச்செய்கிறது.நம் கனவுகள் நிகழ்தருணத்தை மாற்றுகின் றன.நம்முடைய மனப்பாங்கு நாம் எதிர்கொள்ளும் விஷயங்களை நல்லதாக்க, தீயதாக்க முடியும்.நம்முடைய முடிவுதான் அதை நிறப்படுத்துகிறது உலகம் நமக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டுமென்று விரும்பினால் நம்மை மாற்றிக் கொள் ளத் தயாராகவேண்டும். அழகும் கொடுமையும் என்று உனக்கு எல்லாம் நடக்கட்டும்.போய்க் கொண்டேயிரு.எந்த உணர்வும் முடிவல்ல.


**************************************

சனி, 27 டிசம்பர், 2025

ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே !!

டீச்சர்… உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கா ?

சாலையோரமாக நடந்து சென்ற பவானி டீச்சரைக் பின்னால் இருந்து ஒருவர் அழைத்து கேட்டார்.

“யார்… புரியலையே.”

“டீச்சர், இந்த முகத்தை ஒருக்க கவனமாகப் பாருங்க.”

“விளையாடாதேடா, விஷயத்துக்கு வா. எனக்கு முன்னாடி மாதிரி இப்ப கண் பார்வை இல்லடா.”

“டீச்சருக்கு இந்தக் குரலும் அடையாளம் தெரியலையா?”

“இல்லைடா… இத்தனை ஆண்டுகளில் எத்தனை தலைமுறையை நான் பாடல் சொல்லிக் கொடுத்திருக்கேன் எத்தனை பேர் டா ஞாபகத்துல வச்சிருக்க முடியும்.?”

“96-வது பேட்ச்சில் படித்த ஜாஃபர், விஷ்ணு, ஜேக்கப் எல்லாம் டீச்சருக்கு ஞாபகம் இருக்கா?”

அந்த பேட்ச்சை நான் எப்படி மறக்க முடியும்? என் ஆசிரிய வாழ்க்கையில் அதைவிட பிடித்த ஒரு பேட்ச்சே இல்லை. சரி, நீ அந்த பேட்ச்சில் யார்?”

“டீச்சருக்கு அந்த பேட்ச்சிலிருந்த ‘திருடன்’ ஜேக்கப் ஞாபகத்துல இருக்கா?”

“ டேய், அவனை அப்படிச் சொல்லாதே. அவன் ஒரு பாவம். அவன் திருடன் இல்லை.”

டீச்சர் இன்னும் நீங்க அவனுக்கு தான் சப்போர்ட் பண்றீங்களா அவன் திருடுறதை நான் தான் பார்த்து இருக்கேனே அப்பவும் அவனுக்கு சப்போர்ட் பண்ணி காப்பாற்றி விட்டது நீங்க தானே

“ஆம், நான் அவனை காப்பாற்றினேன். ஏன்னா, அவனைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் எனக்குத் தெரியும்.”

“அதென்ன டீச்சர்?”

“அவனுடைய வாழ்க்கை நிலை அப்போ அப்படித்தான் இருந்தது. வீட்டில் ஒரு வேளை உணவு கூட இல்லாத குடும்பம்.”

ஜேக்கப்பைப் பற்றி சொல்ல சொல்ல டீச்சரின் கண்கள் நிறைந்தது அவர் இறுதியில் அழ ஆரம்பித்தார்

“டீச்சர் அழாதீர்கள். டீச்சருடைய பிரார்த்தனைகள் வீணாகப் போகவில்லை.”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்? நீ அவனை பிறகு பார்த்தாயா?”

“டீச்சர்… அப்போ நான்காவது பெஞ்சில் உட்கார்ந்து டீச்சரைத் தொந்தரவு செய்த அந்த ‘திருடன்’ ஜேக்கப் நான்தான்.”

இதைக் கேட்டவுடன் டீச்சர் அவனை கட்டிப்பிடித்தார். அடக்க முடியாத மகிழ்ச்சியின் கண்ணீர் அவர் கண்களிலிருந்து தாரைதாரையாக வழிந்தது.

“சாமி, இதை நீ என்கிட்ட இவ்வளவு நேரம் ஏன் சொல்லவில்லை?”

“டீச்சருக்கு என்னைப் பற்றிய அந்தப் பழைய பாசம் இன்னும் நினைவிருக்கிறதா என்பதை அறியவே.”

“அப்படியா! சரி, நீ இப்படி வேஷம் போட்டிருக்கிறாய்? இப்போ என்ன வேலை செய்கிறாய்?”

“இது வேஷம் இல்லை டீச்சர். நான் இப்போது இந்த ஸ்டேஷனின் எஸ்.ஐ.”

“உண்மையாடா? நான் கேட்கிறது நிஜமா?”

டீச்சருக்கு நம்ப முடியவில்லை.

“ஆமாம் டீச்சர், நான் இப்போது ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு மிட்டாய் வாங்கித் தின்ன வேண்டும் என்ற ஆசையில் அப்போது எடுத்த அந்த ஐந்து ரூபாய், என்னை மற்றவர்களின் முன் ‘திருடன்’ ஆக்கியது. அன்றே என்னை ஏளனம் செய்தவர்களின் முன் ஒரு போலீஸ்காரனாக நிற்க வேண்டும் என்பதே என் மனத்தில் இருந்த கனவாக இருந்தது…”

-நண்பன்


மரணம்_ஒரு_ஆனந்தம்


மரணம்_ஒரு_ஆனந்தம்

நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்ற படி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடும்.

கொஞ்ச நேரத்தில் எப்படியோ இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய் விடும்,

எல்லோரும் கதறியழுதுகாத்திருப்பார்கள்

நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்கள், நண்பர்கள் என எல்லாருக்கும் உடனே தகவல் சென்று விடும்,

இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்து விடுவார்கள்,

இத்தனைக்கும் அந்த வீட்டை நாம் தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,

எல்லாம் நேரம்!

ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,

அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!

உங்களை விட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!

ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒரு வழியாக உள்ளே தள்ளி அடைத்து விட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.

அழுது கொண்டே ஓடி வருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளி வைங்க பந்தல் போடணும்,

நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்த பின்னாடி பத்து காசுக்கு தேறாது!

நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,

ஒருபக்கம் தாரை தப்பட்டை இன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசு சத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?

அத்தனை பேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்க வச்சி நம்ம மானத்தை வாங்கிட்டாங்களே!!

என்ன பண்றது பொணமா பொறந்தாலே இப்படிதான்! ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்

இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தை எல்லாம் சேர்த்து நாலு பேர் ஆடிகொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!

இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம் தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!

அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால் அழுகை குறைந்து விசும்பலாகி இருக்கும். அதற்கு அடுத்த நாள் அந்த விசும்பலும் குறைந்திருக்கும்.

இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள்!

ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனை எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்

சேர்ந்தே புதைந்து போகின்றன!

இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர் துறக்கிறார்கள்!

நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது நாம் ஏன் பொய்யோடும், பகையோடும், பொறாமையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழ வேண்டும்? பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக

வாழுங்கள்...

என்று அன்புடன் எஸ் கே #கோவிந்தராஜ்