selvaraj shanthi
செவ்வாய், 17 பிப்ரவரி, 2026
*What is Lipid Profile?*
சனி, 14 பிப்ரவரி, 2026
உயிர் தோன்றுவதற்கு எது முக்கிய காரணம் ?
சந்தேகமில்லாமல் அது கார்பன் எனப்படும் பொருள்தான்! உயிர் தோன்றுவதற்கு தேவை இந்த கார்பன்! மண்ணில் உயிர்கள் நிலைத்து நிற்பதற்கும் தேவை இந்த கார்பன்!
சக்தி வேண்டுமென்றாலும் தேவை இந்த கார்பன்! பணம் வேண்டும் என்றாலும் தேவை இந்த கார்பன்! உயிர்கள் மண்ணில் கரைந்தாலும் அது ஹைட்ரோ கார்பன்! வைரமும் கார்பன் தான் கரித்துண்டு கார்பன் தான்!
மென்மையாக பென்சில் முனையில் உள்ள ஒரு கிராஃபைட் கார்பன் தான்! அதேநேரத்தில் கடினமான ஆனால் மிக அழகான வைரமும் ஒரு கார்பன்! புரிந்து கொள்ள முடியாத இந்த பொருளின் தன்மையால் தான் ஒரு பெண்ணை நான் கார்பன் என்றுதான் நான் உருவகப் படுத்துவேன்!
காரணம் பென்சில் போல் கூர்மையாக ஆனால் கரையும் குணம் சிலநேரம் ஆனால் அதே நேரம் வைரம் போல் கடினமான மனம் சில நேரம் அந்த வைரத்தின் அழகும் பெண்களுக்கு பிடிக்கும் என்பதால்! இந்த அதிசய கார்பன் தான் அமினோ அமிலம் என்ற உயிர் கொடுக்கிறது! அதைவிட மிக முக்கியம் பெண்களைப்போல் சட்டென்று பிணைப்பை ஏற்படுத்தும்! கெமிக்கல் பாண்டிங் என்று சொல்லுவார்கள்!
இந்தப் கார்பன் பிணைப்பு இன்னும் ஒரு அதிசயம்! கார்பனின் அட்டாமிக் எண் 6, அதாவது ஆறு எலக்ட்ரான் ஆறு புரோட்டான் அதன் ஒரு அணுவில் உண்டு! இந்த ஆறு எலக்ட்ரான் முதல் மட்டத்தில் இரண்டும் கடைசியில் வட்டத்தில் 4 எலக்ட்ரான்கள் அமைந்துள்ளன! இந்த நான்கு என்ற என் நான்கு புறமும் பிணைப்பை ஏற்படுத்தி 10 லட்சம் ஆர்கானிக் பொருட்கள் இந்த பூமியில் உருவாக்கியுள்ளது என்றால் நம்புவீர்களா!
இந்த கார்பன் சைக்கிள் கொஞ்சம் மாறினாலும் நாம் இந்த பூமியில் வாழ முடியாது! இப்பொழுது நாம் அனுபவிக்கும் பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் இந்த கார்பன் சைக்கிளுடன் நாம் விளையாடியதால் வந்ததுதான்!
மரங்கள் செடிகள் போட்டோசைந்தேசிஸ் மூலம் கார்பனை சேர்கிறது! நான் கம்பஸ்சன் அதாவது பெட்ரோல் இன்ஜின் கொண்டு அந்த கார்பனை பிரித்து வானத்தில் வெளியிடுகிறோம்! பூமியை சூடாக்கி வாழமுடியாமல் செய்து கொண்டிருக்கிறோம்!
இந்த கார்பன் அதிசயப் பொருள் பூமியில் நான்கு அதிசய ரூபங்களில் இருக்கிறது! மென்மையான பென்சில் முனையில் உள்ள கிராபைட் கார்பன்! ஒரு கடினமான வைரமும் கார்பன்! இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புல்லரின் என்ற பொருளும் கார்பன் தான்! அது கார்பன் 60! இவையெல்லாம் கார்பனின் அல்ட்ரோப்பு எனப்படும்!
ஒரு கார்பன் 60 பிணைப்புகளை ஏற்படுத்தி இப்படி உருவான பொருள்தான் மனிதகுலம் விஞ்ஞானத்தில் முன்னேறி நேனோ டெக்னாலஜி என இன்று புது புரட்சியை ஏற்படுத்தியுள்ளது!
ஒரு வெட்டி எடுக்காத வைரம்
இப்படித்தான் இருக்கும்! பார்க்கும் 20 சதவீத பொருள் கார்பன் ஆல் உருவானதுதான்! கார்பன் ஹைட்ராக்ஸில் உடன் இணைந்தால் மேலும் ஒரு புதுமை! சர்க்கரை சாராயம் மருந்து பிளாஸ்டிக் என்று மனிதன் உற்பத்தி செய்த பல பொருட்கள் கார்பன் தான் அடிப்படை! லட்சக்கணக்கில் கார்பன் பொருட்கள் இருப்பதால் ஆர்கானிக் வேதியியல் என்று தனிப்பிரிவு பாடத்திட்டத்தில் உண்டு!
இயற்பியலின் தேர்மொடினமிக்ஸ் விதிகள் ஏற்படகாரணம் கார்பன் மூலம் ஏற்பட்ட தொழில் புரட்சி காரணம்! கார்பன் டேட்டிங் என்ற முறையை வைத்து தான் பல்லாயிரம் வருடம் ஆன உயிரினங்களை கண்டுபிடிக்கிறார்கள்! நம் உடலே மெதுவாக எரிந்து கொண்டிருக்கும் ஒரு கார்பன் எஞ்சின்தான்! பெண்கள் இல்லாவிட்டால் மனிதகுலம் கிடையாது! கார்பன் இல்லாவிட்டால் உயிரினமே கிடையாது!
வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
குட்டி இளவரசன் – எஸ். ராமகிருஷ்ணன்
குட்டி இளவரசன் – எஸ். ராமகிருஷ்ணன்
அந்துவான்த் செந்த் எக்ச்பெரி ( Antoine de Saint-Exupery)பிரெஞ்சு எழுத்தாளர். இவர் விமான ஒட்டியாக ராணுவத்தில் பணியாற்றியவர்.
இவர் ஒரு முறை விமானகோளாறு காரணமாக சகரா பாலைவனத்தில் அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் தரையிறங்கினார். அங்கே மனிதர்கள் யாருமேயில்லை . கண்ணுக்கு எட்டிய வரை மணல். இயற்கையின் விநோதம் விரிந்து கிடந்தது. ஒரு நபர் ஒட்டும் விமானம் என்பதால் துணைக்கும் யாருமில்லை.
பகலிரவாக எங்கே போவது என்று தெரியாமல் ஆகாசத்தையும் காற்றையும் மணலையும் பார்த்தபடியே கிடந்தார். அந்த நாட்களில் அவர் மனது அடைந்த திகைப்பு, பரவசம், பயம், கற்பனை அவருக்குள் ஆழமான மாற்றத்தை உருவாக்கியது.
1923 ராணுவத்தை விட்டு வெளியே வந்த பிறகு எழுதுவதில் ஆர்வமாகி தனது முதல்புத்தகத்தை 1925 ஆண்டு வெளியிட்டார். 1944 கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தில் சென்ற போது அவரது விமானம் ஆகாசத்தில் திடீரென தொடர்பிலிருந்து மறைந்துபோனது. தனது கதையில் வரும் குட்டி இளவரசனை போல எக்ச்பெரி வாழ்வும் என்ன ஆனது என்று தெரியாத மர்மமாகவே முடிந்து போனது.
இன்று வரை அவரது மரணம் உறுதி செய்யப்படவில்லை. அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதன் துண்டுகள் சமீபத்தில் கண்டு எடுக்கப்பட்டன. ஆனால் எக்சுபெரி என்னவானார் என்பது துல்லியமாக அறியமுடியவில்லை.
இவரது இலக்கிய சேவையை சிறப்பிக்கும் விதமாக பிரெஞ்சு தேசம் ஐம்பது பிராங்க் நோட்டில் அவரது கதையில் வரும் குட்டி இளவரசன் மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.
எது குட்டி இளவரசனை திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது.
குழந்தைகள் புத்தகம் என்று பொது அடையாளம் சூட்டப்பட்ட போதும் எக்சுபெரியின் நாவல் வாழ்வின் ஆழமான உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் தத்துவார்த்தமானவை. வாழ்வின் புதிர்தன்மையையும் அபத்தத்தையும் விவரிப்பவை. உலகை எந்த மனத்தடையும் அற்று நெருங்க சொல்பவை.
சுயசரிதை தன்மையுடன் துவங்குகிறது நாவல். எனக்கு ஆறு வயதான போது ஒரு அற்புதமான படத்தை கண்டேன். அது ஒரு காட்டுவிலங்கை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பதை காட்டியது. அந்த படத்தை கண்டதும் அது போல ஒன்று வரையலாமே என்று நானும் ஒரு சித்திரம் தீட்டினேன். என்னுடைய படத்தை பெரியவர்களிடம் காட்டிய போது அவர்கள் ஒருவருக்கும் புரியவில்லை. அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது
பெரியவர்கள் ஒரு போதும் எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போதும் ஒயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பு தருவதாக இருக்கிறது.
என்று ஆரம்பிக்கிறது நாவல்.
விமான ஒட்டியாக உள்ள கதை சொல்லி ஆறு வருசங்களுக்கு முன்பு விமானம் பழுதடைந்து ஒரு பாலைவனத்தில் விமானத்தை இறக்குகிறான். அங்கே துணைக்கு யாருமேயில்லை. வாழ்வா சாவா என்ற பிரச்சனையில் தனியே தடுமாறுகிறான். தற்செயலாக விடியலின் போது ஒரு சின்ன குரல் அவனை அழைக்கிறது. அது குட்டி இளவரசனின் குரல். அழகான சிறுவயது தோற்றம்.
அவன் தனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை வரைந்து தரும்படியாக கேட்கிறான். சின்ன பையனாக இருக்கிறான். இங்கே எப்படி வந்தான் என்று புரியாமல் அவன் கேட்டபடியே ஒரு ஆட்டுகுட்டியின் படம் வரைந்து தருகிறான் விமானி.. அந்த சிறுவன் வேறு ஒரு கிரகத்திலிருந்து வந்திருப்பதை அறிந்து அவனிடம் விசாரிக்கிறான். சிறுவன் தான் எங்கிருந்து வந்தேன் என்பதை சொல்ல துவங்குகிறான்.
அந்த சிறுவனின் கிரகம் ஒரு வீட்டினை காட்டிலும் சற்றே பெரியது. அவன் தன்னுடைய கிரகத்தில் ஒரே நாளில் நாற்பத்து மூன்று முறை சூரியன் மறைவதை பார்த்ததாக சொல்லியபடியே ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும் போது சூரிய அஸ்தமனங்கள் மனத்துக்கு பிடித்திருக்கிறது என்று சொல்கிறான்.
குட்டி இளவரசன் பூக்களோடு பேசுகிறான். சித்திரத்தில் உள்ள ஆடு என்ன சாப்பிடும் என்று கவலை கொள்கிறான். மலருக்கு ஏன் முள் தேவைப்படுகிறது என்று சிந்திக்கிறான். தனி ஒருவனாக கிரகத்தில் அவன் வாழ்வதால் அந்த கிரகத்தை சுத்தம் செய்வது முதல் சகல வேலைகளையும் அவன் ஒருவனே செய்கிறான்.
ஒரு வேலையை தேடிக் கொள்ளவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் தன்னை சுற்றிய சிறு கிரகங்களை நோக்கி அவன் பயணம் செய்ய துவங்கினான்.
முதல் கிரகத்தில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் குட்டி இளவரசனை கண்டதும் ஆகா இதோ ஒரு குடிமகன் என்று உற்சாகமாக வரவேற்று தன் அதிகாரத்தை காட்ட துவங்குகிறான். இன்னொரு கிரகத்தில் ஒரு தற்பெருமைகாரனை சந்திக்கிறான். அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். மற்ற கிரகத்தில் ஒரு பிசினெஸ்மேன். ஆறாவது கிரகத்தில் ஒரு வயதான எழுத்தாளர் . இப்படி அவன் சந்தித்த மனிதர்கள் யாவரும் அவனை தனது வேலையாள் போல அபத்தமாகவே நடத்துகிறார்கள்.
ஏழாவதாக அவன் பூமிக்கு வருகிறான். அங்கே ஒரு பாம்பை சந்திக்கிறான். அது அவனோடு பேசுகிறது. மனிதர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று குட்டி இளவரசன் கேட்ட போது பாம்பு மனிதர்கள் தங்களது இருப்பிடத்திலும் தனியாகவே இருக்கிறார்கள் என்று சொல்கிறது. வழியில் ஒரு மலரை சந்தித்து அதன் சுகதுக்கங்களை கேட்கிறான். வழியில் ஒரு நரியை சந்திக்கிறான்.
நரி அவனிடம் சொல்கிறது இதயத்திற்கும் பார்வை உண்டு. அது கண்களுக்கு தென்படாததை பார்க்க முடியும் என்கிறது
அதனால் நரியோடு நட்பு கொள்கிறான் . அதன்பிறகு விமானஒட்டியை சந்தித்து அவனுடன் பழகி நட்பாகிறான். தனது தனிமையயை விமான ஒட்டி குட்டி இளவரசனோடு கழிக்கிறான்.
குட்டி இளவரசன் வானில் உள்ள நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல. அவை கண்ணுக்கு தெரியாத சிரிப்பு. அதை நீ உணர வேண்டும் என்று கற்று தந்துவிட்டு பிரிந்து போய்விடுகிறான். உயிர்தப்பி சொந்த ஊர் வந்த விமானி தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை. அந்த குட்டி இளவரனையும் அவன் உலகின் மீது கொண்டுள்ள பற்றையும் நினைவில் கொண்டபடி அவன் மறுமுறை வரக்கூடும் என்று ஏக்கத்துடன் காத்திருப்பதோடு முடிகிறது
அதிக திருப்பங்கள். கதாபாத்திரங்கள் கிடையாது. குட்டி இளவரசன் பல நேரங்களில் ஒரு தீர்க்கதரிசியை போல நடந்து கொள்கிறான். ஒரு மலரை பாதுக்காப்பாக காப்பாற்ற தெரியாத மனிதர்கள் எப்படி பூமியை காப்பாற்றுவார்கள் என்று கேட்கிறான்.
அது போலவே ஆயிரக்கணக்கான ரோஜா வளர்க்க தெரிந்த மனிதனுக்கு ஒரு ரோஜாவினை கூட புரிந்து கொள்ள முடிந்ததில்லை என்று ஆதங்கம் கொள்கிறான். இயற்கை மனிதனுக்கு என்னவெல்லாம் தந்திருக்கிறது. அதை மனிதர்கள் எப்படி கண்டுகொள்ளாமல் சிதைக்கிறார்கள் என்பதையே நாவல் விவரிக்கிறது
குட்டிஇளவரசன் மிக நவீனமான ஒரு கதாபாத்திரம். அவனால் எலி நரி போன்றவற்றை எளிமையாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்களை புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் ஒருவரிடமிருந்து மற்றவர் விலகி போகவும் துண்டிக்கவும் தான் முயற்சிக்கிறோம். ஒருவரோடு ஒருவர் உறவை ஏற்படுத்திக் கொள்ள விருமபுவதில்லை என்கிறது நரி. அது தான் எக்சுபரியின் குரல்.
96 பக்கங்களே உள்ள இந்த சிறிய நாவல் ஆழமான மனப்பாதிப்பை உருவாக்க கூடியது.
பெரியவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் . அவர்களுக்கே இது சமர்பணம் என்று நாவலின் முகப்புரை கூறுகிறது.
திரைப்படம், குழந்தைகள் திரைப்படம்,, நாடகம் . இசைநாடகம், தொலைக்காட்சி தொடர், காமிக்ஸ்,ரேடியோ நாடகம் என்று நாற்பதுக்கும் மேற்பட்ட வடிவங்களில் குட்டி இளவரசன் மாற்றம் கண்டுள்ளது.
நமக்குள் உள்ள சிறுவனை விழிப்படையச் செய்வதற்காக ஒரு முறை அவசியம் குட்டி இளவரசனை வாசியுங்கள். கவித்துமான அனுபவத்தை பெறுவீர்கள்.
***
Adayar and me....
அன்றிலிருந்து சென்னையை விட்டு வரும் வரை அடையாரில் தான் வாசம். வேலை கிடைத்து கம்பெனி மாறிய போதும், கம்பெனியில் கிளைகள் மாறிய போதும், அடையாருக்குள்ளேயே விடுதி மாறிய போதும் அடையாரை விட்டு வேறெங்கும் மாறவேண்டிய தேவை ஏற்படவில்லை.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
2002 டிசம்பரில், எம்சிஏ ப்ராஜெக்ட் ட்ரைனிங்கிற்காக அடையார் மத்திய கைலாஷ் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது தொடங்கியது என்னுடைய சென்னை நாட்கள். அந்த நவம்பர் மாதம் தான் கோயம்பேடு புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருந்தது.
வெளியில் இருந்து பார்ப்பதற்கும், உள்ளேயும் மிக பிரம்மாண்டமாக, அனைத்து வசதிகளுடனும் மின்னியது. “பஸ் ஸ்டேண்டே படத்துல பார்க்கிற ஏர்போர்ட் மாதிரி பளபள னு இருக்கே” னு தோணுச்சு.
அப்பாவுடன் வந்து விவரங்கள் கேட்டு, சேருவதற்கான நடைமுறைகளை முடித்தப்பின், திங்கட்கிழமையிலிருந்து வரசொல்லியதும், காஞ்சிபுரத்தில் சித்தப்பாவிடம் விட்டுட்டு அப்பா ஊருக்கு போய்ட்டாங்க. முதல் நாள் அடையார் டெப்போ பக்கத்தில் உள்ள விடுதிக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு, பேருந்தில் ஏறி “மத்திய கைலாஷ்” நிறுத்தத்தில் இறங்கி கம்பெனியில் விட்டுட்டு “சாயந்திரம் வந்து அழைத்துக் கொண்டு செல்கிறேன்” என்று சொல்லிட்டு போனாங்க.

சாயந்திரம் அவங்க வர லேட் ஆனதுனால “சரி நாமளே ஹாஸ்டல் போவோம்” அப்படின்னு பேக் ஒன்னு மாட்டிகிட்டு கம்பெனி ல இருந்து அடையார் டெப்போ பக்கத்துல உள்ள விடுதிக்கு பஸ் ரூட்லயே வழி முழுவதும் ஆவென்று வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தே சென்றதில் தொடங்கியது சென்னையில் என் நடை பயணம். விடுதிக்கு போனா எங்க சித்தப்பா பதட்டத்துடன் வாசலில் காத்திருந்தார்கள்.
கம்பெனில போய் பாத்துட்டு நேரா விடுதிக்கு(பஸ்ல) வந்து பார்த்தா நான் இல்ல. அப்போ கையில் செல்போனும் கிடையாது. வேலைக்கு சென்று சில மாதங்கள் கழித்து தான் போன் வாங்கினேன். அவ்ளோ ஈஸியா எதுக்கும் பதட்டமடையாத எங்க சித்தப்பாவை பயங்கரமான பதட்டத்தில் ஆழ்த்திய பெருமை என்னையே சேரும். “சித்தப்பா” அப்படின்னு கூப்பிட்டு சிரிச்ச உடன் அவங்க முகத்துல வந்த நிம்மதி கலந்த ஆசுவாச சிரிப்பு இன்னும் என் மனதில் படமாக இருக்கிறது.
கம்பெனியில் இருந்து குறுக்கு வழியில் நடந்தால் விடுதியை இன்னும் சீக்கிரம் அடைந்து விடலாம். ஆனால் அது எனக்கு சரியாக தெரியாததால் பேருந்து தடத்திலேயே காலையில் வரும் போது பார்த்ததை நினைவுப்படுத்தி நடந்து வந்ததால் நேரமாயிடுச்சு சித்தப்பா அப்படின்னு சொன்னவுடன் என் முதுகில் தட்டி சிரிச்சாங்க.
“நான் ரொம்ப பயந்து போயிட்டேன்” னு அவங்க சொன்னத கேட்ட பொழுது வருத்தமா இருந்துச்சு. ஆனால் இப்போதும், அடையார் சி. எல். ஆர். ஐ ல இருந்து அடையார் டெப்போ வரைக்கும் அந்த மெயின் ரோடு ஃபுல்லா பஸ் ரூட் ல ஆர்வத்துடன் பரபரப்பான சென்னையின் மாலை வேளையை வேடிக்கை பார்த்துகிட்டே நடந்து போனது இன்னும் மிகப்பசுமையான நீங்காத நினைவுகளில் ஒன்று.
அன்றிலிருந்து சென்னையை விட்டு வரும் வரை அடையாரில் தான் வாசம். வேலை கிடைத்து கம்பெனி மாறிய போதும், கம்பெனியில் கிளைகள் மாறிய போதும், அடையாருக்குள்ளேயே விடுதி மாறிய போதும் அடையாரை விட்டு வேறெங்கும் மாறவேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் அடையார் நம்ம சொந்த ஊர் போல மனதுக்கு மிகவும் நெருக்கம்.

காந்தி நகர், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், ஆவின் பூங்காவிற்கு எதிரிலுள்ள பெசன்ட் நகர் ரோடு இங்கெல்லாம் நடந்து போறதே ரொம்ப நல்லாருக்கும். மெயின் ரோட்ல இருந்து அடையாரின் உள்ரோடுகளில், நகரத்தின் பரபரப்பின்றி, நடந்து போவது ஒரு சுக அனுபவம் தான்.
வேலை தேடி சென்னையில் பல இடங்களுக்கு அலைந்திருந்தாலும், விடுதி தேடி, வீடு தேடி அதிகம் அலைந்தது அடையாரில் தான். அதனால் அடையார் எப்பவும் “எங்க ஏரியா”. தீபாவளி, பொங்கல் விடுமுறைக்கால சென்னைக்கு தனி அழகுண்டு. ஊரே அமைதியா, ரோடெல்லாம் வெறிச்சோடி எந்த பரபரப்பும் இல்லாம இருக்கும். அப்போ எல்லாம், டிராபிக் இல்லாத, அமைதியான அதிகாலையில அடையார் பாலத்துக்கு கீழ, மரங்களடர்ந்த பெசன்ட் நகர் ரோட்ல நடக்கிறதெல்லாம், ஆனந்தமா இருக்கும்.
எங்க வீட்ல இருந்து படிக்கவும், வேலைக்கும் முதலில் மெட்ராஸ் வந்தது எங்க சித்தப்பா தான். இன்றுவரை சென்னையில் ஏதேனும் விசாரிக்க, வீடு பார்க்க, முகவரி கேட்க என்று எதுவென்றாலும் எங்கள் உறவுகளில் முதல் அழைப்பு சித்தப்பாக்கு தான். பஸ் ரூட், பஸ் நம்பர் எளிமையான வழிகள் அனைத்தும் அத்துப்படி. அதனால் சித்தப்பாவின் ஆலோசனையும் வழிநடத்துதலும் எப்போதும் இருக்கும். ஆனாலும் செல்ஃபோன் இல்லாததால் நினைத்த நேரத்தில் கேட்க முடியாது.
முதல் வார இறுதிக்கு, காஞ்சிபுரம் சென்று விட்டு ஞாயிறு மாலை கிளம்பி (கூட வருவதாக சொன்ன சித்தப்பாவிடம், “நானே போய்டுவேன் சித்தப்பா. கத்திப்பாரா ல இறங்கி, எம்49 பஸ் பிடிச்சு ஹாஸ்டல் போய்டுவேன்” னு வசனம் பேசிட்டு) எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்த போது ஒரு சம்பவமாகிவிட்டது. கத்திப்பாராவில் இறங்கி “சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற வளைவினை பார்த்தவுடன் அந்த திசையில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஞாயிறு இரவு, போக்குவரத்து, ஜன நடமாட்டம் குறைவாகவே இருந்தது. நடக்கிறேன், நடக்கிறேன், நடந்து கொண்டே இருக்கிறேன். ‘எம்49’ ம் காணோம், பஸ் ஸ்டாப்பும் காணோம். கொஞ்ச நேரத்திற்கு பிறகு தான் “ஆகா…. இது கிண்டி பஸ் ஸ்டாப் போற வழி இல்ல போலவே…. இவ்வளவு நேரம் நடக்க வேண்டி இருக்காதே….” அப்படின்னு தோணுச்சு. ஜன சந்தடியற்ற அமைதியான இரவு நேரம். கடைகளும் எதுவும் இல்லை.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி “கிண்டி பஸ் ஸ்டாப் போகணும்” அப்படின்னு சொல்லி ஏறி உட்கார்ந்து, வழியைப் பார்த்துக் கொண்டே வந்தால்…. நான் வந்த வழியும் இல்லை. மெயின் ரோடும் இல்லாமல் எங்கேயோ போற மாதிரி இருக்கு. “அச்சச்சோ என்னடா இது” அப்படின்னு “அண்ணா ஏன் மெயின் ரோட்ல போகாம ஏதோ ஒரு வழியில் போறீங்க” ன்னு கேட்டேன். அவர் “இல்லம்மா இப்படியே போனா சீக்கிரம் போயிடலாம்.. இதோ இப்ப வந்துரும் பாருங்க” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரத்துல பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு சிரிச்சார். அவருக்கு “தேங்க்ஸ்” சொல்லிட்டு, பஸ் ஸ்டாப்ல இருந்து இந்த பக்கம் திருப்பி பார்த்தால், கொஞ்சம் தூரத்தில் தெரிஞ்சுச்சு… அந்த “சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” போர்டின் பின்புறம்.
“அடக்கடவுளே இந்த போர்டு எல்லாப்பக்கமும் இருக்கும் போல” னு தலையில் தட்டி, சிரித்துக் கொண்டே ‘எம் 49’ பஸ்ஸைப் பிடித்து விடுதியை வந்தடைந்தேன். அறியாத ஊர். இரவு நேரம். வழி மாறி தவித்து நின்றபோது கூட, என்னை அதிகம் கலங்க விடாமல், நம்பிக்கையை கொடுத்து, நல்லெண்ணத்தை என்னுள் விதைத்த அந்த ஆட்டோ அண்ணாவிலிருந்து தொடங்கியது சென்னையில் என் நல் அனுபவங்கள். இதனால் தானோ என்னவோ, துணையில்லாமல், எந்த நேரமென்றாலும் சென்னையில் எங்கும் போக, வர(அது… நடந்து, பஸ், ஆட்டோ எதுவென்றாலும்) அஞ்சியதில்லை. எதுனாலும் பார்த்துக்கலாம் னு ஒரு எண்ணம்.
அப்படிதான் ஒருமுறை எங்க பெரிய அப்பா அலுவலக விஷயமாக ஒருவாரம் சென்னை வந்து, மந்தைவெளியில் அரசாங்கம் கொடுத்த இடத்தில் தங்கியிருந்தார்கள். இரண்டு நாள் கழித்து வீட்டிலிருந்து ஃபோன் செய்யும் பொழுது அப்பாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றதும் சிறு பதட்டம். அதனால் மாலை ஆனதும் ஊரிலிருந்து எங்க அப்பா எனக்கு போன் பண்ணி “அப்பா தங்கி இருக்கிற இடத்துக்கு போய், என்னன்னு பாத்துட்டு போன் பண்ணு” அப்படின்னு சொன்னாங்க.
நான் அலுவலகத்தில் இருந்து மந்தைவெளிக்கு வந்து சேர ஏழரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. அந்த இடம் எங்கே என்று எனக்கு தெரியவில்லை. அப்பா சொன்னதை வைத்து ஒரு ஆட்டோ பிடித்து இடத்தைச் சொல்லி போனால், மெயின் ரோடு விட்டு எங்கேயோ உள்ளார போகுது. வழியில் நிறைய தூர இடைவெளியில் பெரிய பெரிய அதிகாரிகளின் வீட்டு நேம் போர்டு இருக்கு. அதெல்லாம் பாத்துக்கிட்டு, இந்த இடத்தை விசாரித்துக் கொண்டே போனேன்.
இன்னும் உள்ள போகணும்னு சொல்லி சொல்லி, ரொம்ப தூரம் போய் அந்த இடத்தின் கடைசியில் இவர்களுக்கான அந்த பயிற்சி நிலையமும், தங்குமிடமும் இருந்தது. இந்த வழியில் ஆள் அரவமற்ற மரங்கள் அடர்ந்த இடங்கள் மிக அதிகம். அங்க போய் இறங்கி ஆட்டோவை வெயிட்டிங்ல போட்டுட்டு உள்ளார போய் அப்பாவைப் பார்த்தபோது 9 மணியை நெருங்கியிருந்தது.
அந்த நேரத்துல அங்க என்னைய பார்த்ததும் அப்பா, “எப்படிப்பா இங்க வந்த இந்த நேரத்துல” அப்படின்னு ஷாக் ஆயிட்டாங்க. “ஆட்டோல தான்பா… கேட்டுட்டே வந்தேன்” அப்படின்னு சொன்ன உடனே வந்த வழியை நினைத்து அவங்களுக்கு ஒரு பயம். அப்போதும் அவங்களுக்கு நான் சொன்ன பதில் “ஆட்டோ ல தான்பா வழி கேட்டு கேட்டு வந்தேன் ஒன்னும் பயம் எல்லாம் இல்ல.” வெளில வந்து அந்த அண்ணாவிற்கு மிகுந்த நன்றி சொல்லி என்னை ஹாஸ்டல் அனுப்பி வச்சாங்க.
ஒரு முறை நானும் என் தங்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாமாப் பெண்ணை பார்க்க அவசரமாக ஆட்டோவில் சென்றபோது, தங்கையின் கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டு விட்டோம். ஆயிரத்தி சொச்சம் பணமும், அலுவலக அடையாள அட்டை, வங்கி பண பரிவர்த்தனை அட்டைகள் என்று அனைத்தும் அதில் இருந்தது. மாமாப் பெண்ணை பார்த்த பின், சிறிது நேரத்திற்குப் பிறகு தான் கைப்பையை தவறவிட்டதையே உணர்ந்தோம்.
என்ன செய்வதென்று புரியாமல், கவலையுடன் விடுதிக்கு திரும்பினோம். ஆனால் அடுத்த நாள் மாலையே, அந்த ஆட்டோ ஓட்டுநர், விடுதிக்கு வந்து “காலையில் வேறு அவசர வேலை இருந்ததால் இப்போதாம்மா வர முடிந்தது.. எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க” என்று சொல்லி, கைப்பையை ஒப்படைத்த போது நாங்கள் அடைந்த நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. மனப்பூர்வமான நன்றியை செலுத்தி, மகிழ்ச்சியுடன் பணம் கொடுக்க முனைந்த போது, அதை புன்னகையுடன் மறுத்து “பொருளை பத்திரமா வச்சுக்கோங்கம்மா” என்று சொல்லி சென்றதை இன்றளவும் மறக்கவில்லை. இப்படி நேரங்கெட்ட நேரத்திலும் நல்ல நம்பிக்கையான அனுபவங்களையே தந்திருக்கிறார்கள் சென்னையின் ஆட்டோ அண்ணாக்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, தி.நகர் பாண்டி பஜார் பக்கம் ஏதோ ஒரு அலுவலகத்தில் எழுத்துத் தேர்வு. அடையாறில் இருந்து பேருந்தில் திநகர் சென்று, நேரமாகிவிட்டதால் அங்கிருந்து ஆட்டோவில் அந்த அலுவலகத்திற்கு சென்று விட்டேன். பரீட்சைக்கு போனதால் வழியை எல்லாம் நோட் பண்ணல. எழுத்துத் தேர்வு முடிய 12 மணி ஆகிவிட்டது. “முடிவுகளை மெயில் பண்றோம்” னு சொல்லிட்டாங்க.
வெளியில வந்து பேருந்து நிறுத்தத்தை விசாரித்து… விசாரித்து… சந்து சந்தா நடந்து நடந்து… “ஹப்பா… கடைசியா ஒரு மெயின் ரோடு தெரியுது… இதுல எதாவது பஸ் ஸ்டாப் இருக்கான்னு பார்க்கலாம்” அப்படின்னு நினைத்து சந்துல இருந்து வெளியில வந்து எட்டிப் பார்த்தா… எதிர்த்தாப்புல ‘அண்ணா அறிவாலயமும், சன் டிவி சூரியனும்’ தெரியுது… “அடக்கடவுளே எங்கிருந்து எங்கடா நடந்து வந்திருக்கோம்” அப்படின்னு யோசிச்சு எனக்கே செம சிரிப்பாயிடுச்சு. அப்புறமா அங்கிருந்து 23சி பஸ் ஏறி அடையார் வந்தேன்.
ஒருமுறை ஊரில் இருந்து அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி, எல்லாம் வந்திருந்தாங்க. எங்கேயோ போயிட்டு பேருந்து நிறுத்தத்துக்கு போகணும். ஆட்டோ அந்த நேரத்துல கண்ல படல. சரின்னு நம்ம “நடராஜா சர்வீஸ்” ஸ்டார்ட் பண்ணேன். தம்பி கேட்டான், “இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்? பஸ் ஸ்டாப்க்கு எவ்வளவு தூரம் இருக்கு?” உடனே நான், “பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப் வந்துடும் டா” அப்படின்னு சொன்னேன்.
இந்த கேள்வியும் பதிலும் ரிப்பீட் மோட் ல போயிட்டே இருந்துச்சு. (தூரம் கொஞ்சம் அதிகம் தான்.. ஆனா அன்னைக்கு ஆட்டோ எதுவுமே அந்த நேரத்துல இல்ல.. அதனால அவங்களையும் நடக்க வைக்க வேண்டியதாயிடுச்சு). ஹாஸ்டல் வந்தவுடனே, தம்பி, என் ஃபிரண்டு கிட்ட “எவ்வளவு தூரம் எங்களை நடக்க வச்சுடுச்சு தெரியுமாக்கா? பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. னு சொன்னுச்சுக்கா. ஆனா பாலம் ஏறுது… ஏறுது… ஏறுது… இறங்கவே மாட்டேங்குதுக்கா” அப்படின்னு சொல்ல.. அவன் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்து விட்டோம். “என்னையும் இந்த பொண்ணு இப்படித்தான் தம்பி நடக்க வெச்சிருக்கு.. உங்களையுமா?” அப்படின்னு ஃபிரண்டும் சொல்லி ஒரே புலம்பல். எனக்கு சிரிப்பு.
இப்ப கூட, நான் “நடக்கிற தூரம் தான்” அப்படின்னு சொன்னேன்னா.. உடனே என் தம்பி மத்தவங்கள அலர்ட் பண்ணிடுவான். “என்ன டிஸ்டன்ஸ்னு கரெக்ட்டா பாத்துக்கங்க.. இல்லன்னா.. இது, ‘பாலம் ஏறி இறங்குனா பஸ் ஸ்டாப்’ னு சொல்லி சொல்லியே நம்மளை எக்கச்சக்கமா நடக்கவச்சிடும்” அப்படின்ற கிண்டல் இப்ப வரை தொடர்கிறது. சென்னை தந்த நல் அனுபவங்களும் நினைவில் நீங்காத, எப்போதும் தொடரும் தொடர்கதை தான்.
